பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/440

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

அறத்தின் குரல்


“ஐயோ! என் மகனை இழந்த துயரைப் பொறுக்க முடியவில்லை ! இதோ, நான் தீயிலே பாய்ந்து இறந்துவிடப் போகிறேன்” என்று வேதியன் இரைந்து கத்தினான். தேரில் வந்து கொண்டிருந்த கண்ணனும் அர்ச்சுனனும் இதைப் பார்த்தார்கள். கண்ணன் அர்ச்சுனனுக்கு அந்த கிழவனை சுட்டிக் காட்டி, “அர்ச்சுனா! அதோ அந்தக் கிழவன் ஏதோ மகனை இழந்து விட்டேனென்றும் தீயிலே பாய்ந்து விடப் போகிறேனென்றும் கத்திக் கொண்டிருக்கிறான். நீ போய் அவனைத் தேற்றித் தீப்பாயாமல் தடுத்தால் நல்லது” என்று கூறினான். உடனே அர்ச்சுனன் கண்ணன் கூறியபடியே தேரிலிருந்து இறங்கி அந்தணனுக்கு அருகே சென்று, “ஐயா! வயதான வேதியரே! நான் சொல்லுகிறபடி கேளும். நீர் உம்முடைய மகனை இழந்ததற்காகத் தீயில் பாய்ந்து உயிர்விடப் போவதாகக் கூறுகிறீர் இறப்பதும் பிறப்பதும் நம் கையிலா இருக்கிறது? எல்லாம் விதியின் வழி நடக்கும்? மகன் இறந்ததற்காக நீர் ஏன் தீப்பாய வேண்டும்? நீர் தீப்பாய்ந்தால் உம்முடைய மகன் திரும்பி வந்து விடுவானா? அறிவிற் சிறந்தவர் போலத் தோன்றும் நீர் என் சொற்படி கேட்க வேண்டும்” என்று அவருக்கு ஆறுதல் கூறினான்.

உடனே அந்த மாயக்கிழவர் அர்ச்சுனனை நோக்கி, “நல்லது அப்பா! என் மகனுக்காக நான் தீயில் பாய்ந்து இறக்கக்கூடாது என்று நீ தடை செய்கிறாய்! இதே போல் உன் மகன் இறந்தாலும் அவனுக்காகத் தீப்பாய முற்படக் கூடாது. இதற்கு நீ சம்மதித்தால் உன் சொற்படி நானும் கேட்கிறேன்!” என்றார்.

“கிழவரே! என் மகன் இறந்தால் நான் தீப்பாய மாட்டேன். அப்படியே தீப்பாய எண்ணினாலும் அப்போது நீர் வந்து என்னைத் தடுத்தால் கண்டிப்பாக நிறுத்தி விடுகிறேன். இது சத்தியம்” என்று அர்ச்சுனன் அவருக்கு வாக்களித்தான்.

“அப்படியானால் நல்லது? நானும் இப்போது தீப்பாயவில்லை” என்று சிரித்துக் கொண்டே கூறினார் வேதியர்.