பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/536

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

534

அறத்தின் குரல்

பக்கம் ஏற்பட்ட இவ்வளவு அழிவுக்கும் பதிலாகப் பாண்டவர்கள் பக்கம் ஒரே ஓர் அழிவுதான் ஏற்பட்டிருந்தது. ‘கேதுதரன்’ - என்னும் பாண்டவர் படைவீரன் துரியோதனன் கையால் இறந்திருந்தான்.

மீண்டும் போர் தொடர்ந்து நிகழ்ந்த போது சல்லியன் வீமனை எதிர்த்தான். வீமன் தரப்பைச் சேர்ந்த சுமித்திரன் என்ற வீரன் சல்லியனுடைய அம்புக்கு இரையாகி மாண்டான். சுமித்திரன் இறந்தபின் சல்லியன் தனது முழுப்பலத்தையும் வீமனைத் தாக்குவதில் காட்டினான். வீமன் திணறினான். அதைக் கண்ட நகுலன், சகாதேவன், சாத்தகி ஆகியோர்கள் வீமனுக்கு உதவுவதற்காக ஓடிவந்தார்கள்.

ஆனால் அவர்கள் நான்கு பேருமாகச் சேர்ந்தும்கூடச் சல்லியனை எதிர்க்க முடியவில்லை. சல்லியனுக்குப் போர் வெறி பிடித்திருந்தது. ஊழிக்காலத்து மழைத் துளிகள் போல அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகள் அவர்களைத் திக்குமுக்காடச் செய்தன. வீமன் பார்த்தான். ‘இந்தச் சல்லியனை இப்படியே கைமீற விட்டுவிட்டால் பின் நம்மைச் சும்மா விடமாட்டான்’ என்றெண்ணிக்கொண்டு ஆவேசத்தோடு சல்லியனின் தேரை நோக்கிப் பாய்ந்தான். அடுத்த விநாடியில் வீமன் சீறிப்பாயும் மின்னலாக மாறிவிட்டான். அவன் கையிலிருந்த ஆயுதம் தேரைத் தாக்கியது. தேரோட்டியைத் தாக்கியது. தேர்க் குதிரைகளைத் தாக்கியது. வெறிகொண்டு தாக்கிய அந்தத் தாக்குதலால் சல்லியனின் தேர்ப்பாகன் இறந்தான். தேர் உடைந்தது. படைகள் சிதறி ஓடின. சல்லியனின் அணிவகுப்பும் உடைந்துவிட்டது.

போர்க்களத்தின் மற்றொரு பகுதியில் அர்ச்சுனனும் அசுவத்தாமனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தார்கள். அர்த்த சந்திர வடிவாக வளைந்த கத்தி போலிருந்த பல அம்புகளை அர்ச்சுனன் மேல் செலுத்தினான் அசுவத்தாமன். அவை அசுவத்தாமனுடைய திறமையை