பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/555

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

553

யாரிடமும் விடை பெற்றுக் கொள்ளக் கூட அவனுக்குத் தோன்றவில்லை.

இருள் போர்வைக்குள் உலகமும் ஒளியும் மூழ்கி இரண்டறக் கலக்கும் நேரம். கீழே அடிபட்டு விழுந்த துரியோதனன் வேதனை தாங்காமல் மெல்லிய குரலில் முனகிக் கொண்டிருந்தான். சூரியன் மறைகின்ற நேரமும் அவனுடைய வாழ்வு மறைகின்ற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தன.

“சரி வாருங்கள் போகலாம். இனி இவன் விதியை இவனே கவனித்துக் கொள்ளட்டும்” என்று கூறிப் பாண்டவர்களையும் விதுரனையும் அழைத்துக்கொண்டு சென்றான் கண்ணன். எல்லோரும் சமந்தபஞ்சக மலைத் தோட்டத்திலிருந்து கிளம்பினர். மன்னாதி மன்னனாகிய துரியோதனன் மட்டும் கவனிக்க ஆளின்றி அநாதைபோல் வீழ்ந்து கிடந்தான். அவனுடன் இருந்தவை அவநம்பிக்கை, வேதனை, சிந்திய ரத்தம், ஏமாற்றம் இவைகளைத் தவிர வேறெவையும் இல்லை.

மலையிலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் நேரே குருக்ஷேத்திரத்திலுள்ள தங்கள் பாசறைக்குப் போய்த் தங்க வேண்டுமென்றார்கள். “இன்றிரவு பாசறையில் தங்கக்கூடாது. அதனால் எவ்வளவோ கெடுதல்கள் விளையலாம், இது இராஜீய இரகசியம். வெற்றிபெற்ற அரசர்கள் தோல்வியுற்றவனின் படைகளுக்கருகே உள்ள தமது பாசறையில் வசிப்பது பலவிதத்திலும் ஆபத்தைத் தரக்கூடியது. நீங்கள் பேசாமல் என்னோடு வாருங்கள். நம்முடைய படைகள் வேண்டுமானால் பாசறையிலேயே தங்கியிருக்கட்டும். அவற்றைப் பற்றிக் கவலை இல்லை. நாம் மட்டும் பக்கத்தேயுள்ள ஒரு காட்டில் போய்த் தங்கி இரவுப் பொழுதைக் கழிப்போம்” என்று கூறி அவர்களை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றான் கண்ணன், பாண்டவர்களும் அந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டு கண்ணனோடு காட்டிற்குச் சென்றனர்.