பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/561

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

559


ஆனால் துரியோதனனுடைய முகம் சிவந்தது. அவன் திடுக்கிட்டான். எதற்குமே நடுங்காத அவன் சரீரம் நடுங்கியது. இரத்தம் கொதித்தது. மெல்ல எழுந்திருந்து தனக்கு முன் கிடந்த தலைகளை உற்றுப் பார்த்தான். அடுத்த கணம் ‘ஓ’வென்று அலறிக் கூச்சலிட்டான். “ஐயோ! பாவி! அசுவத்தாமா! என்ன காரியம் செய்தாய்? நீயும் ஒரு பிராம்மணனா? பாண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் புதல்வர்களைக் கொன்று தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே? அடே! பாதகா! நீ விளங்குவாயா? உன் குலம் உருப்படுமா? குருகுலத்தின் கொழுந்துகளாகிய இந்தப் பச்சிளம் பாலகர்கள் உனக்கென்ன தீமை செய்தார்கள்?” என்று தன் ஆத்திரத்தை அசுவத்தாமன் மேல் திருப்பினான் துரியோதனன்.

4. அறத்தின் வாழ்வு

தலைகளை வெட்டிக்கொண்டு வந்ததற்காகத் துரியோதனன் தன்னைப் பாராட்டி நன்றி கூறுவான் என்று எதிர்பார்த்த அசுவத்தாமனுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. துரியோதனன் தன் செயலையும் தன்னையும் இவ்வாறு பழித்துக் கூறி வெறுப்பான் என்று அசுவத்தாமன் எதிர்பார்க்கவே இல்லை. தான் வெட்டியது பாண்டவர் தலைகளைத்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அவன். இப்போது இளம் பாண்டவர் தலைகளை வெட்டி விட்டோம் என்று உணர்ந்தபோது அவனுக்கே சதை ஆடி நடுங்கியது, துரியோதனனுக்கு முன்னால் குற்றவாளியைப்போல் வெட்கித் தலைகுனிந்து நின்றான் அவன்.

‘சீ! துரோகி! இன்னும் ஏன் என் முன் நிற்கிறாய்? ஓடு! ஓடிப்போய் உன் பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடு. தொலை, தொலைந்து போ. எங்காவது போய்த் தவம் செய்’ என்று கத்தினான் துரியோதனன்.