பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/570

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

568

அறத்தின் குரல்/நா. பார்த்தசாரதி

முடிசூட்டிக் கொண்டான். திரெளபதி பட்ட மகிஷியாக அருகில் அமர்ந்திருந்தாள். வீரமும், அழகும், தூய்மையும் வாய்மையும் ஆகிய நாற்குணங்களும் நான்கு சகோதரர்களாக மாறி அவன் அருகே ஏவலுக்குக் காத்து நிற்பது போல் வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நான்கு தம்பிமார்களும் அரியணையருகே வணக்கத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

அந்த நல்ல நாளில் வானத்து முகில்கள் தண்ணீரை வாரிச் சொரிந்தன. கற்பகத் தருவின் கிளைகள் புஷ்பங்களை உதிர்த்தனர். தேவர்களின் கைகள் மலர்மாரி பொழிந்தன. தர்மதேவதையின் வதனத்தில் மந்தகாசப் புன்னகை நெளிந்தது. திசைப்பாலகர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். எங்கெங்கு கண்டாலும் இன்பம் பொங்கிப் பாய்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அன்பும் அருளும் அந்தப் பிரவாகத்தில் சங்கமமாயின. இதற்கெல்லாம் காரணமென்ன?

பதினான்கு வருஷங்களாகக் காட்டில் மறைந்திருந்த தர்மம் மீண்டும் அரியணை ஏறியதே; அதுதான் காரணம்! ஆம், அதுவேதான் காரணம்.

முற்றிற்று