பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

31


துக்கொண்டு கிளம்பினார் டாக்டர், புன்னகை பூத்த முகத்துடன், உள்ளே நுழைந்தார். முதல் வரிசையில், அமர்ந்திருந்தான் அண்ணன். அவன் அருகே, வாடகை வீட்டுக்காரர் சங்கத் தலைவர் இருந்தான். சட்டை செய்யவில்லை டாக்டர், யாரையும் -- ஆணவத்தால் அல்ல, ஆதாரங்கள் ஏராளமாக இருக்கும்போது, பொதுமக்களுக்கு உண்மையான தொண்டு செய்கிறோம் என்ற தூய்மை மனதிலே இருக்கும்போது, யாருக்குத்தான் அஞ்சவேண்டும்!! அண்ணன், தானாகவே எழுந்திருந்து, கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும்படி, குடியிருப்போர் சங்கத் தலைவனைப் பிரேரேபித்தான் - அவனும் தலைமை தாங்கி, டாக்டரின் சிறப்புகளை விளக்கிப் பேசினான் மக்கள் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். டாக்டர் தந்த திட்டத்தைப் புகழ்ந்தான், மக்கள் பூரித்தனர் - டாக்டர் ஏதோ பேச முயன்றார் - மக்களின் கரகோஷம் கிளம்பும்படி, சங்கத் தலைவன் சண்டப் பிரசண்டமாக பேசியபடி இருந்தான். "இந்தத் திட்டத்தைக் கண்டு, அண்டையிலுள்ள நகரங்கள் பொறாமை கொண்டுவிட்டன, நமது புராதன நகருக்குப் புதியதோர் அந்தஸ்து வருவது அந்த நகரத்துப பொச்சரிப்புக்காரர்களுக்கும் பிடிக்கவில்லை. டாக்டரின் திட்டத்தின் பயனாக, நமது நகருக்குச் செலவம் பெருகும் என்பது தெரிந்ததும், எப்படியாவது இந்தத் திட்டத்தைத் தகர்த்துவிடுவது என்று, சூதுக்காரர்கள், சூழ்ச்சிக்காரர்கள், முயற்சி செய்தனர். இந்த இரகசியம் எங்களுக்குத் தெரிந்தது; நாங்கள், நமது டாக்டரின் அரிய ஆராய்ச்சிக் கட்டுரையை மீண்டும் பத்திரிகையில் வெளியிட்டோம். சூழ்ச்சிக்காரர்கள், ஆசிரியருக்கு இலஞ்சம் கொடுத்தனர் அந்த இரகசியம் தெரிந்ததும் அவரை வேலையினின்றும் நீக்கப்பட்டது. இப்படி சூழ்ச்சிக்காரரின் ஏற்பாடுகளை முறியடித்துக்கொண்டு