பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு


"பொதுஜனம்! -- மக்களின் தீர்ப்பு!! -- அர்த்தமற்ற வார்த்தைகள். உன்போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின் மனம், ஒரு காலிப் பாண்டம்! யார் எதைப் போட்டாலும், ஏற்றுக்கொள்ளும்! அதிலும், உனக்கு வேடிக்கை, தெரியாது - அந்தப் பாண்டமும் ஓட்டை! போட்ட பண்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே சிதறியே போய்விடும். நீ, ஏதோ புத்தகங்களிலே படித்துவிட்டுப் பேசுகிறாய், பொதுஜன வாக்கு - சத்திய தேவதையின் தீர்ப்பு என்றெல்லாம்! மெழுகுப் பொம்மைக்காரர்கள், தங்கள் தேவைக்கு ஏற்றபடி, மெழுகைக்கொண்டு பலப் பல செய்கிறார்களே, பார்த்திருக்கிறாயல்லவா? யானையும் செய்வார்கள், பூனையும் செய்வார்கள் - நிஜம் போலவே இருக்கும் - மெழுகு கொண்டு! அதுபோல 'சாலக்குக்காரர்கள்', மக்கள் மனதைக் கொண்டு, பல உருவங்களைச் செய்கிறார்கள் - நீ, ஏதோ பக்கள் தீர்ப்பு மகத்தான தீர்ப்பு என்று பாடம் படிக்கிறாய்"

"தவறு! பெருந் தவறு! அநீதியுங்கூட! பொதுமக்களை அவ்வளவு துச்சமாக எண்ணாதே. சகல சக்தியும், கிளம்பும் ஊற்று, ஜனசக்தி! அவர்கள், குடும்ப பாரத்தால் வளைந்து போகக்கூடும் - அதனால் அவர்களுக்கு, முக்கியமான பிரச்னைகளைப்பற்றிச் சிந்திதது முடிவு கட்ட நேரம் இல்லை - அதனாலேயே, அவர்கள் ஏதுமறியாதவர்கள் எதையும் சிந்தித்து முடிவுசெய்யும் ஆற்றலற்றவர்கள் என்று கூறுவது, தவறு. ஜனநாயகக் கோட்பாட்டுக்கே விரோதம். மனித சக்தி மகத்தானது! மக்களின் தீர்ப்பு முடிவானது - சிலாக்கியமானதுங்கூட!