பக்கம்:மணி பல்லவம் 1.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

259

இதைச் சொல்லும்போது நாங்கூர் அடிகளின் குழிந்த கண்களில் ஆவல் ஒளிரும் சாயல் தெரிந்தது. ஏக்கமும் தோன்றியது.

அடிகளிடம் வெகு நேரம் தத்துவங்களையும், ஞான நூல்களையும் பற்றிப் பேசிவிட்டு இறுதியாகக் காவிரிப்பூம் பட்டினத்து நிகழ்ச்சிகளையும் கூறினார் - நீலநாக மறவர். அருட்செல்வ முனிவர் மறைவு, அவர் வளர்த்த பிள்ளையாகிய இளங்குமரன் இப்போது தன் ஆதரவில் இருப்பது, எல்லாவற்றையும் அடிகளுக்கு விவரித்துக் கூறியபோது அவர் அமைதியாகக் கேட்டுக் கொன்டே வந்தார். நீலநாக மறவர் யாவற்றையும் கூறி முடித்தபின்., “நீ இப்போது கூறிய இளங்குமரன் என்னும் பிள்ளையை ஒருநாள் இங்கு அழைத்துவர முடியுமா நீலநாகா?” என்று மெல்லக் கேட்டார் நாங்கூர் அடிகள்.

அவர் என்ன நோக்கத்தோடு அப்படிக் கேட்கிறார் என்று விளங்கிக்கொள்ள இயலாவிடினும், நீலநாக மறவர் இளங்குமரனை ஒருநாள் அவரிடம் அழைத்துவர இணங்கினார்.

மறுநாள் இரவு நீலநாக மறவர் திருநாங்கூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பும்போது அடிகள் மீண்டும் முதல்நாள் தாம் வேண்டிக்கொண்ட அதே வேண்டுகோளை வற்புறுத்திக் கூறினார்.

“என்ன காரணமென்று எனக்கே சொல்லத் தெரியவில்லை, நீலநாகா! அந்தப் பிள்ளை இளங்குமரனை நான் பார்க்க வேண்டும்போல் ஒரு தாகம் நீ அவனைப் பற்றிச் சொன்னவுடன் என்னுள் கிளர்ந்தது. மறந்து விடாமல் விரைவில் அவனை அழைத்து வா”

இளங்குமரனுடைய வீரப் பெருமைக்கு ஆசிரியரான நீலநாக மறவர் இப்போது அந்த இளைஞனின் வாழ்வில் இன்னும் ஏதோ ஒரு பெரிய நல்வாய்ப்பு நெருங்கப் போகிறதென்ற புதிய பெருமை உணர்வுடன் திருநாங்கூரிலிருந்து திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/260&oldid=1142076" இலிருந்து மீள்விக்கப்பட்டது