பக்கம்:மணி பல்லவம் 2.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

401

“எல்லை மீறிய கசப்புக்குச் சுவைகளில் இடமில்லையோ?”

“இடமிருக்கிறது! நஞ்சு என்ற பெயரில்...”

“எல்லை மீறிய கசப்புடன் பழகத் தொடங்கிவிட்டவர்களுக்கும் எல்லை மீறிய சுவையை அளிக்க வேண்டியது தானே? போ. போய் நான் சொன்னபடி செய்துவிட்டு நிம்மதியாய்த் தூங்கு.”

“ஒருநாளுமில்லாத வழக்கமாய் இன்று நான் அவருக்குப் பால் கொண்டு போய்க் கொடுத்தால் சந்தேகம் ஏற்படுமே? அந்த மனிதருடைய முகத்துக் கண் ஒன்றாயினும் சிந்தனை கண்கள் மிகுதியாயிற்றே”

“பயப்படாதே. பழியை என் தலையிற் போட்டுவிடு. நான் கொடுத்தனுப்பியதாகப் பாலை அவரிடம் கொடு. வாங்கிக் கொள்வார். காரியம் முடிந்ததும் வந்து சொல். கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்ப் புலிக் கூண்டிலே தள்ளிவிடலாம்.”

பெருநிதிச் செல்வரின் இந்தக் கட்டளையை மீற முடியாமலும், மீறினாலும் தம் கதி என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பரிசாரகர் பாலில் மயக்கமூட்டி உயிரிழக்கச் செய்யும் நச்சு மருந்தைக் கலந்து கொண்டு நகைவேழம்பர் இருக்கும் பகுதியை நோக்கி நடந்தார்.

அவர் பாலை எடுத்துக் கொண்டு போகிறாரா, இல்லையா என்பதைப் பெருநிதிச் செல்வர் மற்றோர் இடத்தில் மறைவாக வந்து நின்று கண்காணித்துக் கொண்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த பரிசாரகரை எதிர் கொண்டு சந்தித்து “என்ன ஆயிற்று” என்று அடக்க முடியாத ஆவலோடு கேட்டார்.

“நகைவேழம்பர் பொற்கலத்தோடு பாலை வாங்கி வைத்துக் கொண்டு, உங்களுக்கு நன்றி தெரிவிக்குச் சொன்னார். சிறிதும் சந்தேகம் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் சில விநாடிகளில் பருகிவிடுவார் என்று பரிசாரகரிடமிருந்து பதில் வந்தது.

ம-26

ம-26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/107&oldid=1149907" இலிருந்து மீள்விக்கப்பட்டது