பக்கம்:மணி பல்லவம் 2.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

311

லிருந்து, அவர் மழையிலும் புயலிலும் காவிரியில் நீந்திக் கரையேறினாரோ இல்லையோ என்று நீங்களும் நானும் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவரானால் இந்த வழியாகத் தேரில் போகும்போது என்னைப் பார்த்தும் பாராதவர்போல் போகிறார். நாமும் அப்படிக் கல்மனத்தோடு இருந்து விடலாம் என்றால் முடியவில்லையே அப்பா! அவர் இப்போதுகூடப் பட்டினப்பாக்கத்திலிருக்கும் அந்தப் பெண்ணின் மாளிகைக்குத்தான் தேரில் போகிறார் போலிருக்கிறது. அங்கே போயாவது அவரை அழைத்து வரலாம்; வாருங்கள்” என்று கூறிப் பிடிவாதமாக வளநாடுடையாரை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தாள் முல்லை.

ஆனால் எந்தப் பெண்ணின் மாளிகைக்கு இளங்குமரன் போயிருப்பானென நினைத்துக் கொண்டு அவள் தந்தையுடன் புறப்பட்டிருந்தாளோ அந்தப் பெண்ணே அப்போது அதே சாலையில் எதிரில் தேரேறி வருவதைக் கண்டதும் வழியை மறித்தாற்போல் வீதியில் நின்று கொண்டு, “தேரை நிறுத்துங்கள்” என்று இரைந்து கூவினாள் முல்லை. தேர் நின்றது.

“அன்று இந்திர விழாவின் போது பூதசதுக்கத்தில் அவருடைய ஓவியத்தை வரைந்து வாங்கிக் கொள்வதற்காக அவரைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பெண் இவள்தான் அப்பா! இவள் பெயர் ‘சுரமஞ்சரி’ என்று சொல்லிக் கொண்டார்கள். எனக்கு இவளிடம் பேசத் தயக்கமாயிருக்கிறது. நீங்களே இவளைக் கேளுங்கள். இவளைக் கேட்டால் அவர் இப்போது எங்கே போகிறாரென்று தெரிந்தாலும் தெரியலாம்” என்று தந்தையிடம் மெல்லிய குரலில் கூறினாள் முல்லை. தேரின் முன்பகுதியிலிருந்த சுரமஞ்சரி மட்டும்தான் முல்லையின் கண்களுக்குத் தென்பட்டாள். உயர்ந்த தோற்றத்தையுடைய வளநாடுடையாரோ பின்புறம் வேறு இரண்டு பெண்கள் இருப்பதையும் அவர்களின் ஒருத்தி முன்புறமிருப்பவளைப் போலவே தோற்றமளிப்பதையும் கண்டு யாரிடம் கேட்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/17&oldid=1149192" இலிருந்து மீள்விக்கப்பட்டது