பக்கம்:மணி பல்லவம் 2.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

மணிபல்லவம்

பரும் மண்ணைத் தட்டிவிட்டவாறு எழுந்து நின்றார். அளவற்ற கோபத்தால் அவருடைய உதடு துடித்தது.

“இப்படிச் செய்ததற்கு உங்களைப் பழிவாங்காமல் விடப் போவதில்லை. நான் யாரென்று உங்களுக்குத் தெரியாது! சமயம் வாய்க்கும்போது தெரியச் செய்கிறேன்” என்று நீலநாக மறவரை நோக்கி இரைந்து கூக்குரலிடுவதுபோல் முழங்கினார் நகைவேழம்பர். அதைக் கேட்ட நீலநாகர் நகைத்தார்.

“பேசிப் பயனில்லை. முடியுமானால் செய்துகொள். கீழே விழுந்துவிட்ட இந்த வாளையும், உன் தைரியத்தை யும் சேர்த்து எடுத்துக் கொண்டு மதிப்பாக வந்த வழியே போவதுதான் இப்போது நீ செய்ய வேண்டிய செயல்!”

குறுவாளை எடுத்துக் கொண்டு திரும்புவதற்கு முன்னால் ‘நீதானே இவ்வளவுக்கும் காரணம். என்றாவது மறுபடியும் என்னிடம் அகப்பட்டால் உன்னை நிர்மூலமாக்கி விடுவேன்’ என்று குறிப்பிடுவதுபோலக் கடமையாக ஓவியனைப் பார்த்து விட்டுச் சென்றார் நகைவேழம்பர். நீலநாகரின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டு அந்தப் பார்வையின் தாக்குதலிலிருந்து தப்பினான் ஓவியன்.

“ஒற்றைக் கண்ணினாலேயே இப்படி நஞ்சைக் கக்குகிறானே! இந்தக் கொடியவனுக்கு இரண்டு கண்களும் இருந்துவிட்டால் எதிரே தென்படுகிற நல்லவர்களையெல்லாம் இவன் பார்வையே சுட்டெரித்துவிடும். திட்டிவிடம் என்று பார்வையாலேயே கொல்கிற பாம்பு ஒன்று உண்டு” என்றார் நீலநாக மறவர்.

ஓவியன் நாத் தழுதழுக்க அவருக்கு நன்றி சொல்லலானான்:-

“என் உயிரையும், என் நம்பிக்கையையும் அழியாமல் காப்பாற்றி எனக்கு அடைக்கலம் அளித்த கருணை வள்ளல் நீங்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/78&oldid=1149693" இலிருந்து மீள்விக்கப்பட்டது