பக்கம்:மணி பல்லவம் 4.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

760

மணிபல்லவம்

போவதுமாகிய வாழ்க்கையின் மேலேயே அவனுக்கு வெறுப்பாயிருந்தது. நகைவேழம்பருடைய சாவை அவர் ஒருவருடைய சொந்த அழிவாக மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. அந்த ஒருவருடைய சாவில் தன்னைப் போன்ற பலருடைய நம்பிக்கைகளும் சேர்ந்து செத்து அழிந்திருப்பதாக அவன் எண்ணினான். சாவதற்கு முன்னால் அந்த ஒற்றைக் கண் மனிதர் அவனிடம் பேசிய பேச்சுக்களால் அவனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வர் மேலேயே வெறுப்பும் அவநம்பிக்கையும் பெருகுமாறு செய்துவிட்டுப் போயிருந்தார். சாவதற்கு முன் அவர் பேசியிருந்த பேச்சுக்கள் இன்னும்கூட அவன் செவிகளில் ஒலிப்பன போலிருந்தன. அவன் நினைக்கலானான்.

அந்தச் செல்வருக்கு நான் சோற்றுக்கடன் பட்டிருக்கிறேன், நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று இப்போது என்னுடைய உடலில் இருக்கிற சோற்றுச் செருக்கு அவர் அளித்தது. ஆனாலும் இந்த விநாடியே அவருடைய வழிகளிலிருந்து நான் விலகிவிட வேண்டும் போல் எனக்கு அவர் மேல் வெறுப்பாக இருக்கிறது. ‘அடிமையாக இருந்து அடைகிற சுகம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது நோய்தான் என்று சாவதற்கு முன் அவர் கூறினாரே! எனக்கும் ஒருநாள் இந்த கதி நேரலாம் என்றுகூடச் சொன்னாரே ? என்று பலவிதமாகச் சிந்தித்துக்கொண்டே சென்றபோது அருவாளனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வரைப் பற்றிய மதிப்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து அழிந்து விட்டது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையை அடைகிறவரை அருவாள மறவன் தன் தோழனிடம் அப்போது தன் மனத்தில் கிளர்ந்த எண்ணங்களை உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டே போனான். அப்படிப் பேசாமல் தனக்குள்ளேயே தன் சிந்தனை களை அடக்கிக் கொண்டு போவதற்கு அப்போது அவனால் முடியவில்லை.

அருவாளனும் அவன் தோழனும் பெருமாளிகைக் குள் நுழைந்தபோது பூம்புகாரின் கிழக்கு வானத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/151&oldid=1231574" இலிருந்து மீள்விக்கப்பட்டது