பக்கம்:மணி பல்லவம் 4.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

767

வேளையில் கைகட்டி நிற்பதும் கருணை மறம் காட்டுவதும் உன் ஆண்மைக்கு அழகில்லை.....”

“பெரியவரே! நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அறிவினாலும் மனத்தினாலும் வாழ விரும்புகிறவர்கள் உலகில் புதிய ஆண்மை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள். அதுதான் சான்றாண்மை. சால்பை ஆள்வதுதான் சாற்றாண்மை. சான்றாண்மைக் குணத்தை நம்புகிறவர்கள், எதையும் எதிர்ப்பதை வீரமாகக் கொள்வதில்லை. பொறுத்து நிற்பதைத்தான் வீரமாகக் கொள்கிறார்கள். எதையும் எதிர்த்துக் குமுறி நிற்பதுதான் வீரமென்று நம்பிக் கொண்டு நான் வாழ்ந்த காலமும் உண்டு. அப்போது உடல் வலிமையை மட்டும் நம்புகிற பேராண்மையாளனாக இருந்தேன் நான். இப்போதோ உடல் வலிமையில் பெரிது என்று எண்ணுகிற சான்றாண்மையாளனாக என்னை மாற்றி விட்டார் திருநாங்கூர் அடிகள். இப்படி நான் சான்றாண்மை வீரனாக மாறியதைத் தானே நீங்கள் பெரிய கோழைத்தனம் என்று குறிப்பிடுகிறீர்கள்?” எனச் சிரித்த படியே இளங்குமரன் அவருக்கு மறுமொழி கூறினான். வளநாடுடையார் மீண்டும் அவனைக் கேட்டார்.

“உடம்பின் வலிமையால் நீ பலரை எதிர்க்க வேண்டிய அவசியம் மறுபடியும் உன் வாழ்வில் எப்போதாவது நேர்ந்தால் நீ என்ன செய்வாய்?”

“அப்படிப்பட்ட துன்பங்களினால் என்னுடைய சான்றாண்மை வலுவடையுமே ஒழியக் குன்றாது. துக்க நிவாரணம் தேடும்போதுதான் மனித மனம் பிரகாசித்து ஒளிரும் என்று நான் நம்புகிறேன். பெரியவரே! சுடச்சுட ஒளிரும் பொன்போல் கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களிலும், கவலைப்படத் தகுந்த துக்கங்களிலும் வெதும்பி, வெதும்பி இறுதியில் உணர்ச்சிகளைக் கடந்துபோய் நின்று ஒளிர்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று என் ஆசிரியராகிய திருநாங்கூர்த் தவச் செல்வர் எனக்கு அருளுரை கூறியிருக்கிறார். கருணை மறமும்கூட அகங்காரத்துக்கு இடமுண்டாக்கலாம் நாம் நிறையக் கருணை செலுத்துகிறோம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/158&oldid=1231584" இலிருந்து மீள்விக்கப்பட்டது