பக்கம்:மணி பல்லவம் 4.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

670

மணிபல்லவம்


“இன்னும் நான் பார்க்க இதில் என்ன இருக்கிறது! இதை மறுபடியும் பார்க்க வேண்டாமென்றுதானே இதை உன்னிடம் கொடுத்து அனுப்பினேன். மறுபடி எதற்காக என்னிடமே கொண்டு வந்து கொடுக்கிறாய்? இன்று நீ ஏன் இப்படித் திடீர் திடீரென்று மாறி மாறி நடந்து கொள்கிறாய்?” -

“மீண்டும் ஒருமுறைதான் இதைப் பாருங்களேன் அம்மா! இப்போது பார்க்கச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. முன்பு பார்த்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்றும் பாருங்கள்.” என்று தன் இதழ்களில் சிரிப்பை வரவழைக்க முயன்றுகொண்டே வசந்த மாலை மறுமொழி கூறியபோது சுரமஞ்சரி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டுப் பின்பு மெல்ல மெல்ல ஊன்றுகோலின் யாளிமுகப் பிடியைக் கழற்றினாள்.

ஊன்றுகோலை அவள் ஒவ்வொரு மரையாகக் கழற்றக் கழற்றப் பிடியோடு சேர்த்துத் தன் நினைவும் ஒவ்வொன்றாகத் திருகப்படுவது போல உணர்ந்தாள் வசந்தமாலை.

சுரமஞ்சரி பிடியை நன்றாகக் கழற்றிக் குழலைக் கவிழ்த்தாள். முகத்தில் சந்தேகமும் பயமும் விளைந்திட மறுபடியும் ஆட்டி அசைத்துக் கொட்டுவது போல் ஊன்று கோலின் குழலைக் கவிழ்த்தாள். கவிழ்க்கப்பட்ட இடத்தில் எந்தப் பொருளும் கவிழவில்லை, சூனியம் தான் இருந்தது. அதே இடத்தின் வெறுமையைப் பார்த்துக்கொண்டே கண்களில் கோபம் பிறக்கத் தலைநிமிர்ந்து வசந்தமாலையின் முகத்தைச் சந்தித்தாள் சுரமஞ்சரி.

“வசந்தமாலை! முன்பு இருந்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்று கேட்டாய் அல்லவா? கேட்டுக்கொள். குறைவது ஒன்றல்ல. ஒரே சமயத்தில் இரண்டு பொருள்கள் குறைகின்றன. முதலில் எனக்கு உன்மேலிருந்த நம்பிக்கை குறைகிறது. இரண்டாவதாக இதில் என்ன குறைகிறதென்று உனக்கே நன்கு தெரியும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/61&oldid=1231488" இலிருந்து மீள்விக்கப்பட்டது