பக்கம்:மணி பல்லவம் 4.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10. காவியத்தில் கற்ற காதல்

'நீங்கள் ஆசைப்படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும் என்று தன் தலைவி சுரமஞ்சரியை வாழ்த்திவிட்டு அப்பாற் சென்ற வசந்தமாலை, சில நாழிகைகள் கழித்து மீண்டும் திரும்பி வந்த போது சுரமஞ்சரியை முற்றிலும் புதிய சூழ்நிலையில் புதிய கோலத்தில் பார்த்தாள். அவளைச் சுற்றிலும் அந்தப் பெருமாளிகையிலிருந்த பழைய ஏட்டுச்சுவடிகள் குவிந்து கிடந்தன.

சுரமஞ்சரியின் மாடத்தில் விதம்விதமான ஓவியங்கள், வகைவகையான காவியங்களின் ஏட்டுச் சுவடிகள், சீனத்துப் பட்டுக்கள், யவனக் கைவினை, நயம் மிக்க நுண் பொருள்கள், பாண்டி நாட்டுச் சிற்பிகள், ஐம்பொன்னிற் செய்த அழகிய சிற்பங்கள் எல்லாம் நிறைய இருந்தன. ஒவ்வொரு வகைப்பொருளை ஒவ்வொரு காலத்தில் விரும்பித் தேடிச் சேர்த்திருந்தாள் அவள். இந்த வகையில் அவள் ஆசையோடு தேடிச் சேர்த்த கடைசிப் பொருள் அல்லது பொருளோடு தேடிச் சேர்த்த கடைசி ஆசை இளங்குமரனின் ஓவியம்தான். அந்த ஓவியத்துக்கு ஆசைப்பட்ட பின் வேறு எதையும் தேடிச் சேர்க்கிற ஆசையே அவளுக்கு ஏற்படவில்லை. தொடர்ந்து வேறு ஆசைகளுக்கு மனம் தாவி விடாதபடி தன் எல்லையிலேயே மனத்தை நிற்கச் செய்யும் பரிபூரணமான ஆசைகளும் உலகத்தில் உண்டு. மலை உச்சியிலிருந்து உருண்டு விழுகிற கல் கடைசியாக ‘இனிமேல் இதற்கு அப்பால் உருள முடியாது’ என்பதுபோல ஒரு நிலையாகத் தங்கி விடுகிற எல்லையும் உண்டு அல்லவா? இளங்குமரன் என்ற எல்லையில் சுரமஞ்சரியும் அப்படித்தான் கடைசியாகவும் நிறைவாகவும் தன் நினைவைத் தங்க விட்டுவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/70&oldid=1231499" இலிருந்து மீள்விக்கப்பட்டது