நா. பார்த்தசாரதி
949
மனைவியோடும் குழந்தை குட்டிகளோடும் இந்திர விழா பார்க்கக் கடல் கடந்து வந்திருந்த நாகநாட்டு முதியவர் ஒருவர் அவளை நோக்கி குனிந்து தலை நிமிராமல் கூட்டத்தின் ஒரு கோடியிலிருந்து விரைந்து நடந்து வருகிறார்.
அருகே வந்து அவள் முகத்தை ஏறிட்டு நிமிர்ந்து பாராமலே, “நான் உன்னோடு வாதிட வந்திருக்கிறேன்” என்றார் அவர்.
இதைக் கேட்டு அவள் அலட்சியமாகச் சிரிக்கிறாள்.
“முதியவரே! இந்த வயதில் மனைவி மக்களோடு இந்திர விழாப் பார்க்க வந்த இடத்தில் இங்கே என்னைப் போல ஒரு பெண்ணுக்குத் தோற்க ஆசையாக இருக்கிறதா உமக்கு!”
“நீ என்னை வென்று பின்னர் பேச வேண்டிய வார்த்தைகள் இவை!”
“இத்தனை பேர்களை வென்ற எனக்கு உங்களை வெல்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.”
“முடிந்தால் வென்றுகொள். ஒரு காலத்தில் உன்னைப் போல் நானும் இந்த வீதியில் வெற்றி நடை நடந்திருக்கிறேன்.”
“இன்று தளர்நடை நடக்கிறீர்கள்.”
இந்த வார்த்தைகளால் தாக்கப்பட்டுக் கோபத்தோடு அவளருகில் நெருங்கி வந்து நன்றாக அவளை நிமிர்ந்து பார்த்தார் அவர்.
அவள் அந்த மனிதரின் முகத்தைப் பார்த்துவிட்டு அப்படியே அயர்ந்துபோய் நின்றாள். அவளுடைய கையிலிருந்த கொடி நழுவியது. மனத்திலிருந்து பகைமை நழுவியது, மனமும் உடம்பும் புல்லரித்து நடுங்கின.
“முல்லை! நீயா?” என்று அந்த மனிதர் தாங்கொணாத வியப்போடு தன்னை நோக்கிக் கேட்ட