வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 283
கல்யாணியம்மாள்:- இதுவரையில் நாங்கள் சொன்னதெல்லாம் அந்த நிபந்தனைகளின்படி நடப்பதாகவே தான் சொன்னோம்.
பாலாம்பாள்:- நிரம்ப சந்தோஷம். ஆனால் இதில் இன்னொரு காரியம் இருக்கிறது. மைனர் நிரம்பவும் சிறுபிள்ளை ஆகையால், அவரை நான் வஞ்சித்து மயக்கி, அவருடைய மனதுக்கு மாறாக இந்தப் பத்திரத்தை எழுதி வாங்கிக் கொண்டதாக, நாளைக்கு ஜனங்கள் என்மேல் அவதூறு சொல்ல ஆரம்பிப்பார்கள்; அப்படிப்பட்ட துன்பமெல்லாம் எனக்கு நேராமல் தாங்கள்
பார்த்துக் கொள்வீர்களா? - என்றாள்.
சிவஞான:- அதற்குச் சந்தேகம் என்ன? உன்னை நாங்களே சேர்த்து வைத்திருக்க, பிறகு நாங்கள் பிறழுவோமா?
பாலாம்பாள்:- அப்படியானால், என்னுடைய திருப்தியின் பொருட்டு ஒரு காரியம் செய்யுங்கள். தாங்கள் இருவரும், இதற்கடியில் சாட்சிகளாகக் கையெழுத்துச் செய்து விடுங்கள். அந்த ஒர் உறுதியே எனக்குப் போதுமானது. அந்த மைனரே ஏகதேசத்தில் எழுதியிருப்பதை வெளியில் காட்டுவதற்கே எனக்கே வெட்கமாக இருக்கிறது - என்றாள்.
அவளது சொல்லைக் கேட்ட இருவரும் திடுக்கிட்டுப் போயினர். ஏனெனில், அவள் அவ்வாறு தங்களையும் அதில் மாட்டி விடுவாள் என்பதை அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தப் பத்திரத்தை ஆதாரமாக வைத்துக் கொள்ளச் செய்து, அந்த ஆபத்தை நிவர்த்தி செய்து கொண்டால், பிறகு அவளுக்கு ஏதேனும் ஜீவனாம்சம் கொடுத்து விடலாம் என்பது அவர்களது கருத்து; ஆனால் அவள் அவர்களது கையெழுத்தையும் வாங்கி விடவேண்டும் என்னும் நோக்கத்தோடேயே தொடக்கத்தில் இருந்து அந்தப் பத்திரத்தை தான் அலட்சியமாக மதிப்பதாகவும், அவர்களது விருப்பத்திற்கு இணங்க மனமில்லாதவள் போலவும் நடித்து வந்தாள் ஆதலால், அவள் தந்திரமாக, அவர்களது கையெழுத்தை அவசியம் போட்டே தீர வேண்டிய நிலைமைக்கு அவர்களைக் கொணர்ந்து விட்டாள். அந்தச் சமயத்தில் அவர்கள் கையெழுத்தைச் செய்யத் தயங்கினால், அவர்களது சொல் ஏமாற்ற