பக்கம்:மதன கல்யாணி-3.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மதன கல்யாணி அந்தக் காகிதத்தை எடுத்து, அதன் உதவியால் உண்மையான மைனரைக் கண்டுபிடித்து, இவரை ஜெமீந்தார் பதவியிலிருந்து விலக்கப் போவதாகவும், உண்மையான மைனருடைய உடம்பில் ஒரு மச்சம் இருப்பதாகவும், அதைப் போல ஒரு டாக்டருடைய உதவியைக் கொண்டு தன்னுடைய பிள்ளையான இந்த மைன ருடைய மார்பை திராவகத்தால் சுட்டு மச்சம் உண்டாக்கியதாகவும் அவள் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், இந்த மைனர் திடீரென்று உள்ளே நுழைந்து, அவளுடைய மார்பில் கத்தியால் குத்திவிட்டு ஓடினார். நானும் என்னுடைய ஆள்களும் துரத்திக் கொண்டு போய், சமுத்திரத்து மணலில் ஒடிக் கொண்டிருந்த இவரைப் பிடித்துக் கொண்டோம். அந்த சமயத்தில் ராஜபாட்டை யில் போய்க் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரனும் எங்களோடுகூட வந்து இவரைப் பிடித்துக் கொண்டார். இவருடைய இடுப்பில் சொருகப்பட்டிருந்த கத்தியில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. நாங்கள் பிடித்தவுடன் இவர் திகில் கொண்டு மருண்டு மருண்டு விழித்தார். இவரைப் பிடித்துப் போலீசார் உடனே கைதி செய்தார்கள். அவ்வளவு தான் எனக்குத் தெரியும் - என்று கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் வாக்குமூலம் கொடுத்தார். உடனே ஜட்ஜி பாரிஸ்டர் குரோட்டனை நோக்கி, "குறுக்கு விசாரணை செய்யலாம்" என்றார். பாரிஸ்டர் குரோட்டன் துரை உடனே எழுந்து, "இந்த சாட்சியை நான் அதிகமாக விசாரிப்பதற்கு ஒன்றுமில்லை; அத்யாவசியமான இரண்டொரு கேள்விகளே போதுமானவை" என்று கூறிய வண்ணம் ஜெமீந்தாரை நோக்கி, "ஐயா! தாங்கள் தங்களுடைய பெருத்த சமஸ்தானத்தையு, தங்களுடைய அரண்மனை முதலிய வசதியான இடங்களையும், மற்ற சுகசெளகரியங்களையும் விட்டு மைசூருக்குப் போக வேண்டிய காரணமென்ன?" என்றார். கி. ஜெமீந்தார்:- மிகுந்த அழகும், நற்குண நல்லொழுக்கமும, என்னிடத்தில் அளவற்ற வாத்சல்யமும் வைத்திருந்த என்னுடைய யெளவன சம்சாரம் இறந்து போய்விட்டாள். அந்தத் துக்கம் என்னால் சகிக்கக் கூடாமல் போய்விட்டது. ராப்பகல் அதே நினைவாக இருந்து ஆறாத்துயரத்தில் நான் ஆழ்ந்துகிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/148&oldid=853280" இலிருந்து மீள்விக்கப்பட்டது