பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. முதுமொழி நூறு


கழக (சங்ககால) இலக்கியங்களுள், பெரிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள் பதினெண் மேற்கணக்கு எனவும், சிறிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனவும் வழங்கப் பெறும். கணக்கு என்றால் நூல். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் முதுமொழிக் காஞ்சி என்னும் நூலும் ஒன்றாகும். இதனை இயற்றியவர், மதுரைக் கூடலூர்க் கிழார் என்னும் கழகப் புலவர் பெருமானாவார்.

முதுமொழிக் காஞ்சியாவது: எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை அறியச் சொல்வது முதுமொழிக் காஞ்சியாகும்.

இந்நூலுள் நூறு முதுமொழிகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. அவற்றை வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகின் வீடும் திருந்தும் நாடும் திருந்தும் - மக்களினம் உயர்வடையும். அவை வருமாறு:

1. சிறந்த பத்துக் கருத்துகள்

1. கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம், கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கம் உடைமை சிறந்ததாகும்.