பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மனத்தின் தோற்றம்



வண்ணான் என்பதற்கு, உடைக்கு வண்மை-அழகு ஊட்டுபவன் என்பது பொருள். மலையாளத்திலுள்ள மண்ணான் என்பதற்கு, உடையைத் தூய்மை செய்பவன் - அணி (அலங்காரம்) செய்பவன் என்பன பொருளாம். மண்ணுபவன் மண்ணான். மண்ணுதல் என்பதற்குக் கழுவுதல், தூய்மை செய்தல், அழகு செய்தல் என்பன பொருளாகும். இதற்கு ஒளவையாரின் மூதுரை நூலிலிருந்து ஒர் அகச் சான்று காண்பாம்:

“மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணிரும் ஆகாது அதனருகே சிற்றுறல்
உண்ணிரும் ஆகி விடும்” (12)

என்பது மூதுரைப் பாடல். மண் நீர் (மண்ணிர்) என்றால், உடம்பைக் குளித்துக் கழுவித் தூய்மை செய்ய உதவும் நீர் என்று பொருளாம். கடல்நீர் அதற்கு உதவாதன்றோ? இன்னொரு அகச்சான்று கலித்தொகை என்னும் நூலிலிருந்து காண்பாம்: “மண்ணி மாசு அற்ற நின் கூழையுள்” (கலித் தொகை 107-31) என்னும் தொடரின் பொருள்: குளித்துக் கழுவி அழுக்கு போக்கித் தூய்மை செய்த நின் கூந்தல் - என்பதாம். மண்ணினால் மாசு (அழுக்கு) அறும் எனத் தெளிவான பொருளில் சொல்லாட்சி அமைந்துள்ளது. இன்னும் ஒரு சொல்லாட்சியை இங்கே காணலாம்.

கோதுமை - கோதும்பை 1982 மார்ச்சு முதல் நாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத் தலைவனாகவும் பேராசிரியனாகவும் யான் பணி தொடங்கினேன். எனக்குப் பணி தந்த என் வணக்கத்திற்கு உரிய துணைவேந்தர் உயர்திரு வி. ஐ. சுப்பிரமணியனார் அவர்கள், எதைத் தொகுப்பது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை எனக்கே