பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

93



குற: “அருளிலஞ்சி வேலர் தமக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தோம்
ஆதீனத்து மலைகள் எல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”

முருகனுக்கு எங்கள் வள்ளியை மணஞ்செய்வித்து, எங்களைச் சேர்ந்த மலைகளெல்லாம் சீர் வரிசையாகக் கொடுத்துவிட்டோம். எப்படி எங்கள் குலப்பெருமை! என்று விளாசு விளாசு என்று விளாசுகின்றாள் குறவஞ்சி.

இங்குக் கூர்ந்து நோக்கவேண்டியது ஒன்றுண்டு. அஃதென்ன! தமிழ்நாட்டுக் குறப்பெண் ஒருத்தி இமய மலைமுதல் நாஞ்சில் நாட்டு வேள்விமலை வரையும் உள்ள பகுதிகளை எல்லாம், தங்களுடையதாகவும், தங்களைச் சேர்ந்தவர்களுடையதாகவும் காட்டியிருக்கும் தொடர்பு, எண்ணத்தைக் கிளறுகின்றதல்லவா? மற்றும் 'முருகனுக்கு உரியது மலை உலகம்’ என்னும் கருத்தில் உள்ள "சேயோன் மேய மைவரை உலகம்” என்னும் தொல்காப்பிய நூற்பா விற்கு ஏற்ப, குறப் பெண்ணாகிய வள்ளியை மணந்த முருகனுக்குச் சீர்வரிசையாக மலைகளையெல்லாம் கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ள குறத்தியின் கூற்று, கொள்ளை கொள்ளுகின்றதல்லவா உள்ளத்தை!

பின்பு வல்லி குறவஞ்சியை நோக்கி, ‘மலைவளங் கூறினாய்-நாட்டு வளத்தையும் கூறுக’ என்றாள். தொடங்கிவிட்டாள் குறத்தி:

“மாதம் மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு”

இன்னும் கேள். அந்நாட்டில்,

“நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலில் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது தீந்தயிர் மத்து