பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

31


வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகையால், குமட்டூர்க் கண்ணனார் பாடலில் இடம்பெறாவிட்டாலும் சேர்க்கப்பட வேண்டும் என்னும் கருத்து உடையவராய்ப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் தம் பதிகத்தில் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் யவனரைப் பிணித்த நிகழ்ச்சியை இமயத்தில் வில் பொறித்த நிகழ்ச்சிபோல் அல்லாது பாடல் பாடப்பட்ட காலத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சி என்றாலும் நெடுஞ்சேரலாதன் காலத்து நிகழ்ந்தது என்று கூறினோம். அதற்கு முதன்மைக் காரணமாவது கடம்பறுத்த முக்கிய நிகழ்ச்சியானது பதிகத்தில் விடுபட்டபோதிலும் பதிகத்தில் காணப்படும் யவனரைப் பிணித்ததாகிய தொடர்நிகழ்ச்சியில் வேறுவகையில் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது என்று கொண்டதே ஆகும்.

இமயம் நோக்கிச் சென்றபோதும், அங்கிருந்து தன் நாட்டை நோக்கி மீண்டபோதும் நெடுஞ்சேரலாதன் பல மன்னர்களை வென்றான். இந்த வெற்றிகளில் ஆரியரை அடிபணியும்படி செய்த செயல் பதிகத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றிச் செய்திகள் பதிற்றுப்பத்துப் பாடல்களிலும்[1] கூறப்பட்டுள்ளன.

இவனது வடநாட்டுப் போரில் பல அரசர்களை வென்றான், ஆயினும் அவர்களது நாடுகளைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இதனைச் சமுத்திரகுப்தனின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு ஒப்புமையாகக் காட்டலாம். இமயம் சென்ற வழியில் சிலர் நெடுஞ்சேரலாதனைவிட அவர்களது அரசர்கள் மேம்பட்டவர் எனப் புகழ்ந்து கூறினர்[2]. அவர்களது பேராற்றல் அழியும்படி வென்றான். இவ்வாறு புகழ்ந்து கூறியதால் பேராற்றல் அழிக்கப்பட்டவரே ஆரியர். இவனது இமயப்படையெழுச்சி வடநாட்டு அரசர்களின் வரலாற்றில் எங்கும் காணப்படாமைக்கு இதுவே காரணமாகும்.

இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று கூறும் பதிகம் அப்பகுதிகளில் தமிழகத்தின் பெயர் விளங்கும்படி தன் கோலை நிலை நாட்டினான் என்றும் கூறுகிறது[3]. கோலை நிலைநாட்டினான் என்றால் ஆட்சியை நிலைநாட்டினான் என்பது பொருள். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆட்சியை நிலைநாட்டுதல் என்பது அரசாளுதலை


  1. பதிற். 11 : 23
  2. ஷை 11 : 23 - 25
  3. 'தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ' (பதிற். பதி. 2 : 5 - 6)