பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
51
பட்ட இந்தக் கோவை, களாப்பழமும் களங்காயும் கோத்துக்கட்டிய கண்ணி போல் காட்சியளித்தது. இந்தக் கோவையால் அழகுபடுத்தப் பட்டிருந்த பட்டுத் துணியால் ஆன முடியை இவன் அணிந்திருந்ததால் இவன் 'களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்' என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான்[1]. இந்தப் பெயர் பாடலின் உள்ளேயே பாடிய புலவரால் குறிப்பிடப்பட்டுள்ளமை வலிமை மிக்க சான்றாகத் திகழ்கிறது.
கொடைத்தன்மை
இனிய பொருள் எதனைப் பெற்றாலும் இவன் அதனைப் பகுத்துண்ணும் பண்பினன் ஆவான்;[2] பாணர்க்கும்,[3] விறலியர்க்கும்,[4] பரிசிலர்க்கும்[5] இவன் பரிசில் வழங்கினான். போர்த் தொழிலில் வல்ல யானைகளை இவன் பரிசிலாக வழங்கியதும் உண்டு[6]. தனக்கு மகிழ்ச்சியூட்டியவர்களுக்கு இவன் நல்ல கலன்களை வழங்கினான்[7].
பண்பு நலம்
போரில் வெற்றி பெற்றாலும் சினம் தணியாத அரசர்கள்தாம் சங்ககாலத்தில் மிகுதி. இவனோ சினங்கொள்ளாமலேயே நெடுமிடல், கொடுமிடல் ஆகியவர்களோடு போரிட்டு வென்றனன்;[8] போர்க் கைதிகளை நன்முறையில் நடத்தினான். இவன் தனது கொள்கையில் சிறிதும் வளைந்து கொடுக்க மாட்டான். இவன் ஆன்று அவிந்து அடங்கிய செம்மலாக விளங்கினான்[9].
சிறப்புப் பெயர்
இவனை வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயராலும் அழைத்து வந்தனர். இவனது ஆட்சியின்கீழ் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்பதை இதனால் உணரலாம்.