பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
65
பண்பு நலம்
இவன் பெருஞ்சினம் கொண்டவன்[1]. போர் முழக்கத்தைக் கேட்பதில் பெரும் விருப்பினன்[2].
சினத்தீயைப்போலவே இவன் தண்ணிய சாயலையும் உடையவன். இவனது அருள் காவிரி நீர் போலவும், குமரி முனை நீர் போலவும் பயனும், புனிதத் தன்மையும்[3] உடையதாயிருந்தது.
தோற்றப் பொலிவு
சந்தனம் பூசி அதன்மேல் வண்ணக் குழம்புகளால் வகைபெற எழுதி வண்டுகள் மொய்க்குமாறு பொலிவுடன் இவனது மார்பு விளங்கியது[4]. பொன்னாலாகிய மாலையையும் அணிந்திருந்தான்[5]. கணையமரம் போன்ற வலிமை மிக்க விலா எலும்புக் கட்டுடன் அகன்றிருந்தது அவன் மார்பாகும்[6]. மன்னர்களின் ஏழு முடிகளைக் கோத்து அணிந்திருந்தான் எனக் கூறுவோரும் உளர்[7]. இவன் பார்வைக்கு அடக்கம் உடையவனாகக் காணப்பட்டான். எனினும், யாருக்கும் வணங்காத ஆண்மை உடையவனாக விளங்கினான்[8]. யானைமீதும் தேர்மீதும் இவன் ஏறிச் சென்றான்[9].
சிறப்புச் செயல்கள்
இவனது செயல்களில் சிறப்பு மிக்கனவாக இரண்டைக் குறிப்பிடலாம். அஃதாவது கற்பரசி கண்ணகிக்குச் சிலையமைத்துத் தெய்வமாக்கி வழிபட்டதும், காஞ்சியம் பெருந்துறை என்னுமிடத்தில் தன் ஆயத்தார் புடைசூழ நீர்விழாக் கொண்டாடியதும்[10] ஆகும்.
மனைவி
இவனது மனைவி வேண்மாள் ஆவாள். இவளைச் சோழர் குடிப்பெண் என்பர். இவள் சிறந்த அழகியாவாள்[11]. இவன் பிற மகளிரோடு மகிழ்ந்திருந்ததாகத் தெரிகிறது[12].