பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
83
இவ்வாறு இவன் கொடை நல்கிய போதெல்லாம் முன்பு கொடுத்தவற்றை நினைத்துப் பார்த்ததில்லை; இவ்வளவு கொடுக்கிறோமே என்று பெருமித உணர்வு தோன்றி மகிழ்வது மில்லை. கொடுக்கும் போதெல்லாம் பெருவள்ளல்[1].
மற்றும் இவன் வேள்வி செய்து கொடை வழங்கினான்[2]. அவ்வேள்வியில் அந்தணர்களுக்குப் பெறற்கரிய அணிகலன்களைத் தாரை வார்த்துக் கொடுத்தான்;[3] கடவுளர்க்கு உணவூட்டினான்; அதனால் ஐயர்கள் இன்புற்றனர்[4]. வேள்வி செய்த திருமால் வழிநின்ற புரோகிதனுக்கு ஒகந்தூர் என்னும் நெல் மிகுதியாக விளையும் ஊரையே கொடுத்தான்[5].
தன்னைப் பாடிச் சிறப்பித்த புலவர் கபிலர்க்கு நூறாயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். 'நன்றா' என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற்கண்ட இடமெல்லாம் அவருக்குக் காட்டி அவற்றையெல்லாம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தான்[6].
பண்பு நலன்
வள்ளன்மைப் பண்புடன் மற்றும் சிலவும் குறிப்பிடத் தக்கனவாய் இவனிடம் அமைந்திருந்தன. இவன் வளமான உள்ளம் படைத்தவன்[7]. பார்ப்பார்க்கல்லது பணியாமை, நட்டோர்க்கல்லது கண் அஞ்சாமை, மகளிர்க்கல்லது மார்பு மலராமை, உலகமே பிறழ்ந்தாலும் சொன்ன சொல் தவறாமை ஆகிய பண்புகள் இவனிடம் குடிகொண்டிருந்தன[8].
சிறப்புச் செயல்கள்
பகைவரை வென்று கிடைத்த கொண்டிப் பொருளை இவன் தமிழ் வளர்க்கும் பணிக்குச் செலவிட்டான்[9].
இவன் பல ஊர்களைத் தோற்றுவித்து, நாடோடிகளாகத் திரிந்து வந்த மக்களை நிலைபெற்று வாழும்படி செய்தான்[10].