பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அமிர்தமதியைக் கவர்ந்த இன்னிசை

அவந்தி தேசத்தின் தலைநகரமான உஞ்சையில் (உச்சியினியில்) அரண்மனையில் மேல் மாடியில் இராணி அமிர்தமதி கட்டிலிற் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். அந்த நள்ளிரவிலே அரண்மனையும் நகரமும் ஓசையடங்கி அமைதியாக இருந்தன. குளிர்ந்து தணிந்து அமைதியாக இருந்த அந்த நள்ளிரவிலே எங்கிருந்தோ இனிய இசைப்பாட்டு கேட்டது. இந்த அமைதியான நேரத்தில் யாரோ இன்னிசை பாடிக் கொண்டிருந்தார். அந்த இசைப் பாட்டு கேட்பதற்கு டு மிக இனிமையாக இருந்தது. அரண்மனையின் சயன அறைக்கு அருகிலிருந்து அந்த இசைப்பாட்டு வந்தபடியால் அது உறங்கிக் கொண்டிருந்த இராணியின் செவியில் புகுந்து அவளைத் துயில் எழுப்பியது. துயில் உணர்ந்து விழித்துக் கொண்ட இராணி அமிர்தமதி அந்த இன்னிசையை ஓர்ந்து கேட்டாள். அது மாளவ பஞ்சமப் பண். கேட்கக் கேட்க இனிமையாக இருந்தது. இந்த இசைப் பண் இராணியின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அவள் இசையைச் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். சில நேரத்துக்குப் பிறகு இசைப்பாடல் நின்றுவிட்டது. இது, நள்ளிரவில் நடு யாமத்தில் நடந்தது.

இசைப் பாட்டில் மனத்தைப் பறிகொடுத்து விட்ட இராணிக்குத் தூக்கம் வரவில்லை. 'இவ்வளவு இனிமையாக இசை பாடியவன் யார்? அரண்மனை ஊழியனாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய மனம் அவனைக் காணவேண்டு மென்று அவாவுகிறது. அவனை யடைய வேண்டுமென்று விரும்புகிறது. அவன் அரண்மனை ஊழியனாகத் தான் இருக்க வேண்டும். பொழுது விடிந்த பிறகு விசாரிப்போம்' என்று அவள் தனக்குள் எண்ணினாள். அவள், தூக்கம் இல்லாமல், இசைப் பாட்டைப் பற்றியும், அதைப் பாடினவனைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.

6

மெல்லப் பொழுது விடிந்தது. இராணி எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டாள். தன்னுடைய பணிப் பெண்ணாகிய குணவதி என்பவளைத் தனியே அழைத்து இரகசியமாகப் பேசினாள். முன் இரவு தான் கேட்ட இனிய இசைப்பாட்டின் சிறப்பைக் கூறி,