பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

175

இதுவரையில் கோயில் கட்டிடங்களை எந்தெந்தப் பொருள் களால் அமைத்தார்கள் என்பதைக் கண்டோம். இனி, நமது நாட்டுக் கோயில் அமைப்புகளையும் அவற்றின் விதங்களைப் பற்றியும் ஆராய்வோம்.

மூன்று வகைப் பிரிவுகள்

பாரத (இந்திய) நாட்டுக் கட்டிடங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை நாகரம், வேசரம், திராவிடம்

என்பன.

·

இவற்றில் நாகரம் என்பது வட இந்திய கட்டிடக் கலை. இவை நருமதை ஆற்றுக்கு வடக்கே அமைக்கப்பட்டவை. அடி முதல் முடிவரையில் நான்கு பட்டையாக (சதுரமாக) அமைக்கப்படுவது இது. இது தமிழ் நாட்டில் இடம்பெறவில்லை. ஆகவே இது நமது ஆராய்ச்சிக்கு உட்படவில்லை.

இரண்டாவதான வேசரம் என்னும் பெயருள்ள கட்டிடவகை, பண்டைக் காலத்தில் பெரிதும் பௌத்த மதத்தாரால் வளர்ச்சி யடைந்ததாகத் தோன்றுகிறது. இந்த வேசரக் கட்டிடங்கள், தரை அமைப்பிலும் (Plan) உடல் (கட்டிட) அமைப்பிலும், விமான (கூரை) அமைப்பிலும் வட்டவடிவமாக அல்லது நீண்ட அரைவட்ட வடிவமாக இருக்கும். இந்தக் கட்டிட அமைப்பு முறை, தமிழ் நாட்டுக் கோயில் கட்டிட அமைப்பு சிலவற்றில் இடம் பெற்றுள்ளன. இதைப் பற்றிப் பின்னர் அதற்குரிய இடத்தில் கூறுவோம்.

மூன்றாவது பிரிவான திராவிடம் என்னும் பிரிவு தென் இந்திய கோயில் கட்டிடங்களாகும். இவை வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் காணப்படுகின்றன. திராவிடக் கோயில் கட்டிட வகையில் தமிழர் சளுக்கியர் ஹொய்சளர் முதலிய பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளை விடுத்து தமிழ் நாட்டுக் கோயில்களை மட்டும் ஆராய்வோம். தமிழ் நாட்டுக் கோயில்களிலும் பல்லவர் காலத்துக் கோயில்கள். (பிற்காலச்) சோழர் காலத்துக் கோயில்கள், பாண்டியர் காலத்துக் கோயில்கள், விஜய நகர அரசர்காலத்துக் கோயில்கள் என்று உட்பிரிவுகள் உள்ளன.