பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

47

புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்ட பிற்காலத்திலே அவ்வுருவத்தை நின்ற கோலமாகவும் இருந்த கோலமாகவும் கிடந்த (படுத்த) கோலமாகவும் சிற்பிகள் அமைத்தார்கள். வைணவர், திருமால் திருவுருவத்தை இவ்வாறே மூன்று விதமாக அமைத்ததை மேலே கூறினோம்.

பௌத்த மதத்தைப் போலவே ஜைன சமயமும் (சமண மதம்) பண்டைக் காலத்திலே நமது நாட்டிலே சிறப்படைந்திருந்தது. சமண சமயத்தைச் சேர்ந்த தமிழர், அருகக் கடவுளின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின் உருவத்தையும் வணங்கினார்கள்.

ஒரு நுட்பச் செய்தி

பௌத்த ஜைன மதத்துக்கும் சைவ வைணவ சமயத்துக்கும், சிற்ப உருவ அமைப்பில் உள்ள ஒரு நுட்மான செய்தியைக் கூற விரும்புகிறேன். அந்த நுட்பம் இதுவாகும். பௌத்தரின் புத்த உருவத்துக்கும் ஜைனரின் தீர்த்தங்கரர், அருகர் உருவங்களுக்கும் இரண்டு கைகள் மட்டும் உண்டு. ஆனால், அவர்களின் சிறு தெய்வங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகள் உள்ளன. இதற்கு நேர்மாறான அமைப்பு சைவ வணவ உருவங்களில் காணப்படுகின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகள் இருக்கின்றன. ஆனால், சைவ வைணவ சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் இருக்கின்றன.

உதாரணமாக, பௌத்தர்களின் சிறு தெய்வமாகிய அவலோகிதர், புத்த பதவியடையும் நிலையை யடைந்திருந்தாலும், அப்பதவியை இன்னும் அடையாதபடியால், சிறு தெய்வமாகக் கருதப்படுகிறார். ஆகையினாலே, அவருக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். அது போலவே தாரை முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள்.

சமணரும் தமது உயர்ந்த தெய்வமாகிய அருகர் அல்லது தீர்த்தங்கரர் உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வணங்கும் இந்திரன், ஜுவாலாமாலினி முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள்.