பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பொருளையும் வழங்கினார்கள். அக்காலத்தில் சமுதாயத்திலே உயர்நிலை பெற்றிருந்த பாணர், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தாழ்ந்த நிலையை யடைந்து தீண்டப்படாதவர் நிலையில் தாழ்த்தப் பட்டனர்.

கி.பி. 7-ஆம் 8-ஆம் 9-ஆம் நூற்றாண்டுகளில் இருந்த பேர்பெற்ற இசைப்பாணர்கள், திருஞான சம்பந்தருடன் இசைப்பண் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருமால் அடியவரான திருப்பாணழ்வாரும், வரகுண பாண்டியன் காலத்தில் இருந்த பாணபத்திரரும் ஆவர். கி. பி.10-ஆம் நூற்றாண்டிலே இசைப் பாணர் மரபு அருகிவிட்டது.

தேவாரத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியும் அபயகுலசேகர சோழ மகாராசரும், அத்திரு முறைகளுக்குப்பண் அடைவு தெரியாமல் மயங்கிக் கடைசியில் திரு எருக்கத்தம் புலியூருக்குச் சென்றார்கள். ஏனென்றால் திருவெருக் கத்தம் புலியூரில்தான் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் பரம்பரையினர் வாழ்ந்திருந்தனர். இவர்கள் தேவாரத்திற்குப் பண்ணடைவு அமைக்கச் சென்றபோது, அவ்வூரில் அக்குலத்தில் இருந்தவர் ஒருபெண்மணியே. அவ்வம்மையார் அமைத்துக்கொடுத்த பண் அமைப்புக்களே இப்போது தேவாரத்தில் காணப்படுகிற பண் அடைவுகள்.

சில இசை நூல்கள்

பண்டைக் காலத்திலே இசைத் தமிழ் நூல்கள் இருந்தன என்று கூறினோம். அவற்றை இங்கு ஆராய்வோம். இசைப் பாட்டாகிய பரிபாடல்களையும் முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்களையும் முதற் சங்க காலத்தில் இயற்றினார்கள் என்று இறையனார் அகப் பொருள் உரை கூறுகிறது. இவை இசைத்தமிழ் நூல்கள் என்று தெரிகின்றன.

அடியார்க்கு நல்லார், "இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங் குருகும், தேவவிருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன.” என்று எழுதுகிறார். இவர் கூறுகிற பெருநாரை பெருங்குருகும், இறையனார் அகப்பொருள் உரை கூறுகிற முதுநாரை முதுகுருகும் ஓன்றுபோலும். இந்நூல்களைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.