பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

-

கிறித்துவமும் தமிழும்

39

இந்தியாவுடன் வாணிகம் செய்யக் கடைசியாக முயற்சி செய்தவர்கள் பிரெஞ்சுக்காரர். “பிரெஞ்சுக் கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம்” 1664-ல் ஏற்படுத்தப்பட்டது. பிரெஞ்சுக்காரர் புதுச்சேரி முதலிய இடங்களில் வாணிகம் செய்துவந்தனர். டியுப்ளே என்பவர் புதுச்சேரிக்கு அலுவலாளராய் வந்தபோது இந்தியாவில் பிரெஞ்சு அரசாட்சியை நிலைநாட்ட முயற்சிசெய்தார். அவருடைய முயற்சி வெற்றியாகவே இருந்தது. ஆனால், பிரெஞ்சுக்காரரின் வெற்றியையும் செல்வாக்கையும் தடைப்படுத்தி, அவர்களை இந்தியாவிலிருந்து துரத்திவிட்டு, ஆங்கில அரசாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்னும் எண்ணத்துடன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார் முயற்சி செய்தார்கள். பிறகு இரு திறத்தாருக்கும் பல போர்கள் நிகழ்ந்தன. கடைசியாக, ஆங்கிலேயர் வெற்றி பெற்று ஆங்கில அரசாட்சியை நிலை நிறுவினர். இதற்கு அக்காலத்தில் இந்தியாவின் நிலைமை இடங் கொடுத்தது. பிறகு, இலங்கை முதலிய தேசங்களையும் பிடித்து அரசாளத் தொடங்கினார்கள். இவற்றை யெல்லாம் விரிவாக எழுதுவது யாம் சொல்லப் புகுந்த கருத்துக்குப் புறம்பானதாகு மாதலால், மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டது.

வாணிகத்துக்காக வந்த ஐரோப்பியர்கள் இந்தியரைக் கிறித்தவ மதத்திற் சேர்க்கவும் முயற்சி செய்து வந்தார்கள். இந்துக் களைக் கிறித்தவராக்கும் பொருட்டு அனேக பாதிரிமார்களை ஐரோப்பிய தேசங்களிலிருந்து அழைத்து வந்தார்கள். நமது தேசத்துக்கு வந்த பாதிரிமார்கள் கிறித்தவ மதத்தைப் போதிக்க முற்பட்டபோது, அவர்களுக்கு இந்நாட்டுமொழிகள் தடையாக நின்றன. ஆகவே, அவர்கள் முதலில் இந்திய மொழிகளைக் கற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தாங்கள் எந்த நாட்டாருக்கு மதபோதனை செய்யக் கருதினார்களோ அந்த நாட்டு மொழியைக் கற்றுத் தேர்ந்து, அதிற் பேசவும் சொற்பொழிவு செய்யவும் முயன்றார்கள். அந்த முறையில் தமிழ்நாட்டிற்கு வந்த பாதிரிமார்கள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து தமிழிற் பேசவும், சொற்பொழிவு நிகழ்த்தவும், நூல் இயற்றவும் தொடங்கினார்கள். இவ்வாறு தமிழ்மொழிக்கும் ஐரோப்பியப் பாதிரி மாருக்கும் ஏற்பட்ட தொடர்பினால், தமிழிற் சில மாறுதல்கள் அல்லது முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை ஆராய்வது தான் இப்புத்தகத்தின் நோக்கமாகும்.