42
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18
குணத்திசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்
குடதிசைச் சென்ற ஞாயிறு போல
என்பது மணிமேகலை.
குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப் பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின் ஞாயிறு கோடா நன்பகல் அமயத்து
என்பது பதிற்றுப்பத்து.
7
திருவரங்கம் திருக்கோயிலில் பள்ளிகொண்டிருக்கிற திருவரங்கப்பெருமான் குடதிசையில் தலையை வைத்து, குண திசையில் காலை நீட்டி, தென்திசையில் இலங்கையை நோக்கி, வடதிசையில் முதுகைக் காட்டிப் பள்ளிகொண்டிருக்கிறார் என்று தொண்டரடிப் பொடியாழ்வார் கூறுகிறார்.
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி கடல்நிறக் கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு உடல்எனக் குருகு மாலோ என்செய்கேன் உலகத் தீரே
இந்தச் செய்யுள்களிலே கிழக்குத் திசையும் மேற்குத் திசையும், குணக்குத் திசை குடக்குத் திசை என்று கூறப்பட்டிருத்தல் காண்க. பழைய நூல்களிலே குணக்கு குடக்கு என்னும் சொற்களே வழங்கப் பட்டனவன்றி, கிழக்கு மேற்கு என்னும் சொற்கள் பண்டைக் காலத்தில் வழங்கப்படவில்லை.
பிற்காலத்திலே, குணக்கு, குடக்கு என்னும் சொற்கள் வழக்கிழந்து கிழக்கு, மேற்கு என்னும் சொற்கள் அவற்றிற்குப் பதிலாக வழங்கப்பட்டன. விஜயநகர அரசனாகிய கிருஷ்ண தேவராயர் காலத்தில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டு கிழக்கு மேற்கு என்னும் சொல்லைத் திசைப் பெயராகக் கூறுகிறது.
பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்காம்
என்றும்,
குடக்கு வாருணம் மேக்குக் குறித்த பச்சிமமே மேற்காம்9 என்றும் அந்நிகண்டு கூறுகிறது.