பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

மருகால்தலை பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேறு பல பிராமிக் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டிலும் மற்ற இடங்களிலும் புதியவாகப் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனைமலை, திருப்பரங்குன்றம், மாங்குளம் (அரிட்டாபட்டி), முத்துப்பட்டி, வரிச்சியூர், அழகர்மலை, கருங்காலக்குடி, கீழவளவு, மேட்டுப் பட்டி (சித்தர் மலை), விக்கிரமமங்கலம் (உண்டான் கல்லு), கொங்கர் புளியங்குளம், சித்தன்னவாசல், புகழூர், அரச்சலூர், மாமண்டூர், மாலகொண்டா முதலான இடங்களில் பழைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வப் போது எபிகிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டன.

பிராமிக்கு முந்திய எழுத்து

தமிழ் இலக்கியங்களின் பழைமையை அறியாதவர்கள், தமிழ் இலக்கியங்கள் கி.பி, 8ஆம் நூற்றாண்டு, 10ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை என்று அக்காலத்தில் எழுதியும் பேசியும் வந்தனர். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்களுடைய கருத்து தவறு என்பதைக் கண்டார்கள். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவை யாகையால், தமிழ் இலக்கியங்கள் அக்காலத்திலேயே தோன்றிவிட்டன என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், பிராமி எழுத்து தமிழகத்திற்கு வருவதற்கு முன்னமே வேறு தமிழ் எழுத்து இருந்தது எயும் அறியாமல் பிராமி எழுத்து தமிழகத்துக்கு வந்தபிறகுதான் தமிழருக்கு எழுத்து கிடைத்தது என்றும் பிராமி எழுத்தினால் அவர்கள் இலக்கியங்களை எழுதினார்கள் என்றும்; சிலர் சொல்லத் தொடங்கினார்கள். அஃதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழில் எழுத்தும் இல்லை; இலக்கியமும் இல்லை என்பது இவர்கள் கருத்து.

அரிட்டாபட்டி கழுகுமலைக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்படுக்கைகள், பிராமி எழுத்துக்கள், இவற்றைப்பற்றி 1907 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறை, இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து. தமிழ் எழுத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றியும், வட்டெழுத்தின் தோற்றம் வளர்ச்சியைப் பற்றியும் விளக்கந் தருகிற அரிய சான்றாக இருக்கிறது என்று எழுதியமை முன்னமே காட்டினோம்.