பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

68

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

மும்முரமாகச் செய்துவந்தார் கௌதம முனிவர். இவருடைய விடா முயற்சியைக் கண்ட வசவர்த்தி மாரன் தனக்குள் இவ்வாறு எண்ணினான். 'இந்தச் சித்தார்த்தருடைய முயற்சி மிகப் பெரிது. இவர் செய்கிற கடுமையான தியானமும் தவமும் மிகப் பெரியன. ஆகையினாலே ஒருநாள் இவர் புத்த பதவியடைவது உறுதி. இவர் புத்தராவதைத் தடுக்கவேண்டும். ஆகையினாலே இப் பொழுதே இவரிடம் சென்று சில யோசனைகளைக் கூறி இவர் மனத்தைக் கலைத்து இவருடைய கடுமையான தவத்தை நிறுத்துவேன்.

இவ்வாறு தனக்குள் எண்ணிக்கொண்ட வசவர்த்தி மாரன், கௌதம முனிவரிடம் வந்தான். வந்து இவ்வாறு கூறினான், “அன்பரே! தங்கள் உடல் பெரிதும் மெலிந்து விட்டது. உடலின் நிறமும் மாறி விட்டது. மரணம் உம்மை நெருங்கியிருக்கிறது. நீர் செய்யும் அப்பிரணத்தியானம் முதலிய தபசுகள் உம்முடைய மரணத்திற்குக் காரணமாக இருக்கின்றன. நீர் ஏன் இறக்கவேண்டும்? இறப்பதைவிட உயிர்வாழ்வது எவ்வளவோ மேன்மையானது. உயிருடன் இருந்தால் நல்ல புண்ணிய காரியங்களைச் செய்யலாம். பிரமசரியனாகவும் இருக்கலாம். அக்கினி பூசையும் செய்யலாம். அக்கினி பூசை செய்தால் உம்முடைய புண்ணிய காரியங்கள் அதிக பலனையடையும். கடுமையாகத் தியானம் செய்வது தக்க பலன் அளிக்காது என்று உமக்கே இப்போது ஐய முண்டாகிறது. இதற்கு முன்பு, போதி சத்துவர்கள் புத்த பதவியடையச் சென்ற மார்க்கங்கள் எல்லாம் மிகவும் கடினமாக இருந்தன. நீர் ஏன் வீணாக முயற்சி செய்கிறீர்? இந்தக் கடுமையான முயற்சிகள் உமக்கு மரணத்தைத்தான் கொடுக்கும். இதை நீர் விட்டுவிடும்” என்று கூறி போலியான அன்பைக் காட்டி இனிமையாகப் பேசினார்.

வசவர்த்தி மாரனுடைய பொய்யன்பையும் போலிப் பேச் சையும் கேட்ட கௌதமமுனிவர் அவனிடம் வெறுப்புக்கொண்டார். அவனைப் பார்த்து இவ்வாறு கூறினார் “மனவுறுதியற்ற சோம்பேறிகளை வசப் படுத்தும் மாரனே! என்னுடைய இந்த முயற்சியைக் கெடுத்து அழிப்பது உனக்கு ஊதியம் தரும் என்று எண்ணி இங்கு வந்து இந்த வார்த்தைகளைக் கூறினாய். நீர் புகழ்ந்து பேசுகிற அக்கினி பூசை முதலியவைகளில் பலன் ஒன்றும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அவை யாருக்குப் பயன்படுமோ அவர்களிடம் அதைக் கூறு.