பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

97

அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று பார்த்தபோது, நேற்று இரவுதான் அவர் காலமான செய்தியை ஞானக் கண்ணினால் அறிந்தார்.

பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்த போது, முன்பு தம்முடன் தமது சீடராக இருந்த கொண் டஞ்ஞர் முதலிய ஐந்து தாபசகர்கள் போதிக்கத்தக்கவர்கள் என்று கண்டு, அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று பார்த்த போது, வாரணாசி (காசி) நகரத்திலே இஸிபதனம் என்னும் இடத்தில் இருக்கிறதை அறிந்து அவ்விடம் போக எண்ணினார்.

அந்த ஐந்து தாபசகர்களை நாடிப் பதினெட்டு யோசனை தூரத்தில் உள்ள காசிமாநகரத்திற்குச் செல்லக் கால்நடையாக நடக்கத் தொடங்கினார்.

உபகரைச் சந்தித்தல்

காசியை நோக்கி நடந்தபோது கயா என்னும் இடத்தருகிலே உபகர் என்னும் பெயருள்ள ஆஜீவகத்துறவி எதிர்ப்பட்டார். அவர் பகவன் புத்தரைப் பார்த்து, "முனிவரே! தங்களுடைய கண் முதலான பொறிகள் மிகத் தூயனவாக இருக்கின்றன. உடம்பின் நிறமும் பொன் மயமாக இருக்கிறது. தாங்கள் யாரிடத்தில் துறவு பெற்றீர்கள்? தங்கள் குருநாதன் யார்? யாருடைய உபதேசத்தைப் பின்பற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது பகவன் புத்தர் அவருக்கு இவ்வாறு விடை யளித்தார்: “நான் எல்லாப் பகைகளையும் வெற்றி கொண்டேன். நான் எல்லா வற்றையும் அறிந்தேன். நான் எல்லாவிதத்திலும் குற்றமற்றவன், எல்லா வற்றையும் துறந்தவன். ஆசைகளை நீக்கி உயர்ந்த நிலையை அடைந் துள்ளேன். நானே முயன்று போதியை யடைந்தபடியினாலே, யாரை எனது குருநாதன் என்று கூறுவது? எனக்குக் குருநாதன் இல்லை. மண் ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் எனக்கு நிகரானவர் இலர். இவ் வுலகத்திலே நான் பரிசுத்தமானவன், சம்புத்த பதவியை யடைந்தவன். ஆசைகளை அறுத்தபடியினாலே சாந்தியடைந்து நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றிருக்கிறேன். சத்தியலோகம் என்னும் இராச்சியத்தை நிறுவுவதற் காக வாரணாசி நகரத்திற்குப் போகிறேன். இந்த இருண்ட உலகத்திலே இறவாமை என்னும் முரசைக் கொட்டப் போகிறேன்.”