மயில்விழி மான்
25
முழக்கங்கள் வந்த திசைகளை நோக்கினேன். மதில் சுவர் மீதும் மலைப்பாறைகளின் மீதும் மரங்களின் உச்சியிலும் கையில் வில்லை வளைத்து அம்பு தொடுத்து என் பேரில் விடுவதற்கு ஆயத்தமாக வீரர் பலர் நின்றார்கள்.
4
எனக்கு அப்போது எவ்வளவு அதிசயமாக இருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ள வேண்டியது தான். பல தடவை கண்ணை மூடித் திறந்து பார்த்தேன். அந்தக் காட்சி அதே மாதிரி தெரிந்தது. அந்த வீரர்கள் என் பேரில் அம்பை விடாததற்குக் காரணம், நான் அந்தப் பெண்ணுக்கு வெகு சமீபத்தில் இருந்தது தான் என்று தெரிந்து கொண்டேன்.
என் மூளை அந்த அபாயகரமான வேளையில் சரியான வேலை செய்தது. அடுத்த தீவில் உள்ள ராட்சத மக்களின் உணவு வழக்கம் நினைவுக்கு வந்தது. நான் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண்ணின் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கக்கூடிய கலக்கத்தை அறிந்து கொண்டேன்.
அதற்குள் அந்தப் பெண்ணுக்கும் கொஞ்சம் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும்.
சட்டென்று நாலு அடி நடந்து வந்து அம்புகள் என் மேல் விழாமல் குறுக்கிட்டுத் தடுப்பவள் போல் நின்று கொண்டாள்.
"என்ன சொன்னீர்கள்? இன்னொரு தடவை சொல்லுங்கள்!" என்றாள்.