பக்கம்:மயில்விழி மான்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மயில்விழி மான்

"உன்னைப் பார்த்தாலே போதும், பசி தாகம் பறந்துவிடும் என்று சொன்னேன்! நீ எதற்காகக் கூச்சல் போட்டாய்? இவர்கள் எல்லோரும் யார்? எதற்காக வில்லை வளைத்து அம்பு தொடுக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

அணுக்குண்டு - ஹைட்ரஜன் குண்டுகளைப் பற்றி உலகம் பீதி அடைந்திருக்கும் காலத்தில் வில்லும் அம்பும் வைத்துக் கொண்டு சண்டையிடும் வீரர்களும் இத்தீவில் இருக்கிறார்களே என்னும் அதிசயம் என்மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.

நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் அந்தப் பெண், "நீர் என்ன சாப்பிடுவது வழக்கம்?" என்று கேட்டாள்.

"இட்டிலி, தோசை, சாதம், முறுக்கு, சீடை, இடியாப்பம், பொரி விளங்காய் உருண்டை இன்னும் எது கிடைத்தாலும் சாப்பிடுவேன்!" என்றேன்.

அந்தப்பெண் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுச் சுற்றிலும் நின்ற வில்லம்பு வீரர்களுக்கு ஏதோ சைகை காட்டினாள். அவர்களில் ஒருவன் அருகில் வந்தான். அவனிடம், "நலங்கிள்ளி! என் தந்தையை உடனே அழைத்து வா!" என்றாள்.

அந்த வீரனை அவள் அழைத்த பெயர் எனக்கு மிக்க வியப்பை உண்டாக்கியது. பழந்தமிழ் நாட்டுப் பெயராக அல்லவோ இருக்கிறது?

"உன் தந்தையின் பெயர் என்ன?" என்றேன்.