பக்கம்:மயில்விழி மான்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

67

எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

இப்படி நாங்கள் சிரித்துக் கொண்டிருந்த சமயத்திலே தான் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான். எல்லாரும் அவசரமாகச் சிரிப்பை அடக்கிக் கொண்டோ ம். நமச்சிவாயம், "என்ன, மாமா! நான் வரும்போது ஒரே சிரிப்பாயிருந்ததே!" என்று கேட்டான். "எல்லாம் உன்னுடைய பிரபாவத்தைப் பற்றித்தான்!" என்று பொதுப்படையாகச் சொன்னேன்.

நமச்சிவாயம் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் விழித்துவிட்டு "நீங்கள் நாடகம் பார்க்க வந்ததற்கு ரொம்பச் சந்தோஷம், மாமா! அதற்கு வந்தனம் செலுத்தவே வந்தேன். நாடகம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பிடித்ததா?" என்று கேட்டான்.

"நாடகம் நன்றாயிருந்தது. எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்தார் எல்லாருக்கும் ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் ஏதோ புதுமையான நாடகம் என்று விளம்பரம் செய்திருந்தாயே; பழைய நாடகந்தானே?" என்றேன்.

"யார் சொன்னது? புது நாடகந்தான், மாமா! எங்கள் கம்பெனி வாத்தியாரே புதிதாக எழுதியதல்லவா?" என்றான்.

"அது என்னமோ, அப்பா! உங்கள் வாத்தியாரே ஒருவேளை 'காப்பி' அடித்து உன்னை ஏமாற்றி விட்டாரோ, என்னமோ? இந்த நாடகம்