பக்கம்:மயில்விழி மான்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மயில்விழி மான்

என்று நினைத்தேன். ஆனால் அது போகவில்லை; விடாமல் எங்களைத் தொடர்ந்து வந்தது.

யாழ்ப்பாணத்திலேதான் நாங்கள் அதிக நாள் தங்கினோம். ஒரு கோயில் உற்சவம் முடிந்து இன்னும் ஓர் உற்சவத்திற்காகக் காத்திருந்த சமயத்தில் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான்; முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். கொழும்பில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த நமச்சிவாயம் கம்பெனியை யாழ்ப்பாணத்தார்கள் ஒரு 'ஸ்பெஷல்' நாடகத்துக்காகத் தருவித்திருந்தார்கள். வரும் வழியில் ஸ்திரீ வேஷக்காரனுக்கு சுரம் வந்துவிட்டது. அதைப்பற்றி வெளியில் சொன்னால் வேறுவிதமான இடைஞ்சல்கள் ஏற்படும். இந்தியாவிலிருந்து வந்தவர்களில் யாருக்காவது சுரம் வந்துவிட்டதாகத் தெரிந்தால், இலங்கையில் தொத்து வியாதிச் சிறைச்சாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள். அப்புறம் உயிர் பிழைத்து வெளியில் வருவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ தெரியாது!

இந்த நிலைமையில் என்ன செய்வது? 'ஸ்பெஷல்' நாடகத்தை ரத்து செய்வதா? என்ன காரணத்தைச் சொல்லி ரத்து செய்வது? நாடகத்துக்கு அழைத்திருந்தவர்கள் ஏராளமாகப் பணம் செலவிட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்குப் பண நஷ்டம். நமச்சிவாயத்துக்குப் பெயர் நஷ்டம்.

அழமாட்டாக் குறையாக இந்த விவரங்களையெல்லாம் நமச்சிவாயம் என்னிடம் சொன்னான்.