நாடகக்காரி
75
அவன் வந்த சமயம் நான் வீட்டில் இல்லை. நமச்சிவாயமும் நீலமணியும் ஒருவாறு பேசி முடிவு செய்துகொண்டு என்னிடம் சம்மதம் கேட்பதற்காகக் காத்திருந்தார்கள் என்று தோன்றியது.
நமச்சிவாயம் கம்பெனியில் பிரதான ஸ்திரீவேஷம் போட்டுவந்த பையன் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டானாம்! நீலமணியுடன் நடித்த பிறகு வேறு யாருடனும் நடிப்பதற்கு நமச்சிவாயத்துக்கும் பிடிக்கவேயில்லையாம். இப்படி அப்படி என்று ஏதேதோ சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டு போனான்.
அவனுடைய பேச்செல்லாம் எனக்கு தேவையாயிருக்கவில்லை. ஏற்கனவே நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். இந்தப் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணிவைப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இவள் சாதாரணக் குடித்தனக்காரப் பையன் ஒருத்தனைக் கலியாணம் செய்து கொண்டு அவனுக்குச் சமையல் செய்து போட்டுக் கொண்டு வீட்டில் நிம்மதியாக வாழக் கூடியவளும் அல்ல. இவளை இப்படியே வெகுகாலம் கலியாணம் இல்லாமல் என் வீட்டில் வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. ஆகையால் கடவுளே பார்த்துத்தான் எங்களை அச்சமயம் இலங்கைப் பிரயாணம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். நீலமணியை நமச்சிவாயத்தின் கையில் பிடித்துக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான். நமச்சிவாயமும் அறிவாளியான பிள்ளை. அப்படியொன்றும் ஒழுக்கம் கெட்டவன் என்று பெயர் வாங்கவில்லை.