பக்கம்:மயில்விழி மான்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மயில்விழி மான்

போது ஒரே கூக்குரலாயிருந்ததே, என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.

"நீங்களே கேளுங்கள், மாமா! உங்கள் அருமை மகளை நீங்களே கேளுங்கள்" என்றான் நமச்சிவாயம்.

"ராகமாலிகையை எந்த ராகத்தில் முடித்தால் என்ன மாமா! 'பேஹாக்' கில் முடிக்காமல் மத்திய மாவதியில் முடித்துவிட்டதாகச் சண்டை பிடிக்கிறார்?" என்றாள் நீலமணி.

"எந்த ராகத்தில் முடிந்தாலுந்தான் ஒன்றுமில்லையே? மத்தியமாவதியில் முடிக்காமல் நான் சொன்னபடி 'பேஹாக்' கில் முடிப்பதுதானே?" என்றான் நமச்சிவாயம்.

"பாடுகிறது நான் தானே? எனக்கு இஷ்டமான ராகத்தில் நான் பாடுகிறேன்" என்றான் நீலமணி.

"பாடுகிறவர்களுக்காகப் பாட்டா? கேட்கிறவர்களுக்குப் பாட்டா? நீங்கள் சொல்லுங்கள், மாமா!" என்றான் நமச்சிவாயம்.

"கேட்கிறவர்கள் அப்படியொன்றும் மத்தியமாவதியைக் கேட்டுக் காதைப் பொத்திக் கொள்ளவில்லையே? கொட்டகை இடிந்து விழும்படி கரகோஷ ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்களே!" என்றாள் நீலமணி.

"உன் பாட்டைக் கேட்டா கரகோஷம் செய்தார்கள்? நான் மேடையில் அச்சமயம் தோன்றியதற்காக அல்லவோ கரகோஷம் செய்தார்கள்!" என்றான் நமச்சிவாயம்.