பக்கம்:மயில்விழி மான்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மயில்விழி மான்

"அட அசட்டுக் குழந்தைகளா!" என்று இரண்டு பேரையும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பார்த்துச் சிரித்தேன்.

"மாமா! எங்களைப் பார்த்து நீங்கள் மட்டுந்தானா சிரிப்பீர்கள்? ஊரே சிரிக்கும்" என்றான் நமச்சிவாயம்.

"ஆமாம், தம்பி! நீங்கள் இப்படி அற்ப விஷயத்துக்குப் பெரிய சண்டையாகப் போடுகிறீர்கள்! இதன் உண்மை தெரியாதவர்கள் ஒன்றைப் பத்தாக்கி ஊசியை உலக்கையாக்கி ஊரெல்லாம் டமாரம் அடித்து வீண் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள். பிறகு ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கி விடும்! ஜாக்கிரதை!" என்றேன்.

உடனே பேச்சை மாற்றினேன், யோக க்ஷேமங்களை விசாரித்தேன். அவர்களுடைய நாடகங்களைப் பற்றி நாடெல்லாம் புகழ்வதையும் கூறினேன்.

இரண்டு பேரையும் தனித்தனியாகப் பார்த்து நல்ல வார்த்தையாகப் புத்திமதி கூறினேன். நான் கூறியவற்றை இரண்டு பேரும் அப்படி அப்படியே ஒப்புக் கொண்டார்கள். தங்களுடைய குற்றத்தை உணர்ந்தவர்கள் போல் பேசினார்கள்.

"ஒரு நல்ல நாள் பார்த்து ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய்க் கலியாணம் செய்து கொண்டு விடுங்கள். குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அப்புறம் சின்ன விஷயங்களைப் பற்றிச் சண்டைபோட அவகாசம் இராது" என்றேன்.