இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11
|
மருத நிலத்து இளம் பெண்கள் பலர், தம் நிலத்தை அடுத்திருந்த நெய்தல் நிலத்துக் கடற்கரைக்குச் சென்று, விளையாடி மகிழும் வழக்கம் மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு செல்வாருள் அவ்வூர்த் தலைவன் மகளும் ஒருத்தி. ஒரு நாள், தன் தோழியரோடு ஆங்கு ஆடச் சென்றவள், அத்தோழியர் தாம் தாம் விரும்பும் ஒவ்வொரு ஆடலை விரும்பி, அங்கங்கே, தங்கி விட்டனராக, அவள் மட்டும் பாவை பண்ணும் கருத்துடையவளாய்த், தனியே சென்று, கடல் நீர் வந்து பாயும் கழியை அடைந்து, அங்கு வளர்ந்திருக்கும் தண்டாங்கோரையைப் பறித்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் நின்று பறித்தாள். அவள் கைவிரல்களும் சிவந்து விட்டன. ஆயினும், பாவை பண்ணுவதற்கு வேண்டுமளவு பறிக்க முடியவில்லை. அவளும் சோர்ந்து போனாள். அந் நிலையில் ஆங்கு வந்தான் ஓர் அழகிய இளைஞன். அவன் அவளைக் கண்டான். அவள் கைவிரல் சிவந்திருப்பதைப் பார்த்தான்.