16
மருமக்கள்வழி மான்மியம்
அவ் அன்பிற்கு இடங்கொடாதபடி, தன் சகோதரிகளின் குழந்தைகளுக்கு அவகாசிகள் நிலையிற் குடும்பச் சொத்தைக் கொடுக்கும்படி செய்தது. சகோதரிகளின் குழந்தைகளுக்குச் ‘சேஷகாரர்’ என்று பெயர். இவர்களின் இதம்போல் காரணவன் நடக்கத் தவறினால், அவனைக் ‘குடும்பதோஷி‘ என்று கூறிக் காரணவ ஸ்தானத்திலிருந்து நீக்கவேண்டும் வழி தேடுவார்கள். இதனால் எப்போதும் கோர்ட் விவகாரம்தான். குடும்பச் சொத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று காரணவன் நினைப்பதற்கு இடமே இல்லாமற் போய்விட்டது. குடும்பச் சொத்தும் பாழாகும் நிலையில் வந்து விட்டது. நாஞ்சினாட்டிலுள்ள பெருங் குடும்பங்களிற் பெரும் பாலன இவ்வாறாக அல்லற்பட்டுத் தவித்துக் கொண்டிருந்தன.
நாஞ்சினாட்டுப் பெண்களின் துன்பம் சொல்லி அளவிட முடியாது. பல தாரங்களை ஒருவன் மணந்து கொள்ளலாம். இங்ஙனம் பலருள் ஒருத்தியாய் வாழ்வது நாஞ்சினாட்டில் சர்வ சாதாரணமாய்ப் போயிற்று. கணவன் இறந்த பிற்பாடு. மறுமணம் செய்துகொள்ளும் உரிமை விதவைக்கு இருந்தது. இவ்வுரிமையால் பெண் மக்களின் அல்லற்பாடு மிகுந்ததேயன்றிக் குறைவுபடவில்லை. தான் மணந்த மனைவியை ஆதரித்துக் காப்பாற்ற வேண்டுமென்ற பொறுப்பைக் கணவன் அவ்வளவாக மேற்கொள்ளவில்லை. சேஷகாரர்களுக்குக் காரணவனுடைய மனைவி மனைவி மக்களைக் கவனிக்கவேண்டும் பொறுப்புச் சிறிதும் இல்லை. இவ்வாறான பல குறை-