பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - - மறவர் சீமை

எண்பத்து ஐந்து ஈட்டிகள் இருந்தன. அத்துடன் பத்து எறி ஈட்டிகளும், இருபது ஈட்டிகளும், இருபத்து ஒரு பொதி வெடிமருந்தும், பதினாயிரம் தோட்டாக்களும் அவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பப்பட்டன. நானும் உட்ன் சென்றேன். வெள்ளை மருதுசேர்வைக்காரர் கட்டளைப்படி இந்த அணிக்கு அவரது மருமகன் ஆளஞ்சாத்தேவர் தலைமை ஏற்று வந்தார். சிவத்த தம்பியுடன் அடைப்பம் பிச்சணன் சேர்வையும் உடன் வந்தார். எங்களுக்கு கட்டபொம்மு நாயக்கர் அன்பளிப்பு வழங்கிச் சிறப்புச் செய்தார். எனக்கும் பட்டுத்துண்டும் பொன்னாலான இருகாப்புகளும், பொன்னாலான ஒரு கழுத்துச் சங்கிலியும், ஒரு குதிரையும் கொடுத்தார். பிறகு இருநூறு ஆட்களை என்னுடன் அனுப்பி வைத்து இராமநாதபுரம் சீமையில் கும்பெனியாருக்கு எதிராக கிளர்ச்சிகளை முடுக்கிவிடுமாறு சொன்னார். அவர்களில் நூறுபேர் சிவகங்கையைச் சேர்ந்தவர்கள். ஐம்பதுபேர் காடல்குடி பாளையத்துக்காரர்கள் ஐம்பது பேர் பாஞ்சாலக்குறிச்சியார், நாங்கள் கமுதிக்குச் சென்றோம். கடைவீதியைச் சூறையாடினோம். பிறகு அபிராமம் சென்றோம். காதர் மீரான் அம்பலத்தைத் தேடி ஏற்கனவே இவர் கிருதுமால் நதிப்போக்கு தடைப்படுத்தப்பட்டதை கலெக்டருக்கு தகவல் கொடுத்ததற்காக சின்னமருது சேர்வைக்காரரும் சிவத்த தம்பியும் அவரைக் கொன்று போட வேண்டும் என ஆணைபிறப்பித்து இருந்தனர். அவர் பிடிக்கப்பட்டார். அவரை கொல்வதற்கு. முயன்றனர். நான் தலையிட்டு, அவரை விடுவிக்குமாறு செய்தேன். சின்னமருது சேர்வைக்காரருக்கு என்மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது. என்னைக் கொன்றுவிடும்படி சொல்லிவிட்டார். அவரது கட்டளைப்படி அம்பலக்காரரை கொல்லாமல் விட்டதும் அபிராமத்தைத் தீயிட்டு கொளுத்துவதற்கு நான் உடன்பட்டு உதவவில்லையென்பதும் இதற்குரிய காரணமாகும்.

நாங்கள் அடுத்து கொடுமலூர் சென்றோம். அங்குள்ள கும்பெனியாரது சேகரம்பட்டறையில் உள்ள நெல்லை சூறையாடினோம். அங்கேயே சமையலுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு