பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - மறவர் சீமை

சொல்லொணாத் துயரங்கள். இழப்புகள். சிங்கன் செட்டி போன்ற சிறந்த மக்கள் தலைவர்களைக் கிளர்ச்சியிலே களபலி கொடுத்தது. இந்த நிலையை எவ்விதம் மாற்றுவது? அல்லது மக்களை மீண்டும் திரட்டிக் கும்பெனி நிர்வாகத்துடன் இறுதியாக மோதுவது! (கொரில்லாப் போர்) மறைந்திருந்து தாக்கும் முறைகளில் அவர்களை அவர்களது சொத்துக்களை, அவர்களது சாதனங்களை அவர்களது கைக்கூலிகளை அழிதது வெற்றி பெறுவது, அல்லது அந்தப் போரிலே - வெள்ளைப் பரங்கிகள் ஒருவேளை மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால்.... சங்க காலம் தொட்டு வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியும், பசும்பூண் பாண்டியனும் மாற்றாரை எதிர்த்துப் புறமுதுகு இடச் செய்த இந்தப் புனித மண்ணில் தமது உயிரை மாய்த்துக் கொண்டு மறக்குடியின் மானத்தைக் காப்பது!

ஆம்! இதவே சரியான வழியாகும். எத்தனை நாட்களுக்கு மாற்றுடையில் அன்னியச் சீமையில் கோழை போல மறைந்து வாழ்வது? சீச்சீ..... மறவன் கோழையா? இல்லை. எப்பொழுதுமே இல்லை. அவன் கோழையாக வாழ்ந்து இருந்தால், சோழப் பேரரசும் பாண்டியப் பேரரசும் தோன்றி இருக்குமா? அவர்களது புலிக்கொடியும், மீன் கொடியும் புவி முழுவதும் பறந்ததுடன் இமயத்தை எட்டி இருக்குமா? ஆயிரக்கணக்கான மறவர்கள் பல போர்க் களங்களில் சாய்ந்து மடிந்த பிறகுதானே! இந்தத் தியாகச் சின்னமான வெற்றிக்கொடிகள் கங்கைச் சமவெளியிலும் கடாரத்திலும் பட்டொளி வீசிப் பறந்தன. தமிழனது பேராண்மையும், போர்த் திறனும் கலங்கரை விளக்காகப் பளிச்சிட்டு வரலாறு படைத்தன.

தலைமறைவாகவே பொழுதைப் போக்கினால், என்றும் நிரந்தரக் கோழையாக அல்லவா மாறிவிட நேரிடும். இது மறப்பண்பு அல்லவே! ஒருவகையாகச் சித்திரங்குடி சேர்வைக்காரர் மறவர் சீமை திரும்ப முடிவு செய்து விட்டார்.