பக்கம்:மறைமலையம் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
21

வேண்டுமளவுக்கு அடங்கியிருக்கின்றன என்றாலும்,தாயானவள் தன் குழந்தையின் உடம்புநலத்திற் கருத்துடை யளாய்,அதற்கேற்ற உணவுப் பண்டங்களை உட்கொண்டு வருவளாயின், அவளது பாலிற் குழந்தையின் உடல்நலத்திற்கு இன்றியமையாதனவான மேற்குறித்த பொருட் கருவுகளெல்லாம் நன்கு கலந்திருக்கும் தாயானவள் தான் வழக்கமாய் உண்பது அரிசி கோதுமை கம்பு சோளம் கேழ்வரகு முதலிய வித்துக்களில் ஒன்றாயிருப்பினும்,பாலையும் பாலின் பயன்களான தயிர் மோர் வெண்ணெய் நெய் முதலியவை களையும்,பலவகைக் கீரைகளையும் பழங்களையும் அவள் அடுத்தடுத்து உட்கொண்டு வரல் வேண்டும். வீட்டின் வெளியே வராமல் உள்ளேயேயிருக்கும் மாதர்கள் இடை யிடையே பிற்பகல் வெயிலிற் காய்வதோடு,எண்ணெய் தேய்த்து முழுகுதலுங் கட்டாயமாகச் செய்து வரல் வேண்டும். ஏனென்றால்,உடல்நலத்திற்கு இன்றியமை யாத உய்வனவுகளில் நாலாம் வகையது பகலவன் வெளிச்சத்திலும், பால் வெண்ணெய் நெய் முதலியவற்றிலும் நன்கமைந்துளது. எள்ளினின்றும் எடுத்த நெய்யில் இந் நாலாம்வகை உய்வனவு சிறிதும் இல்லாமையால், எள்நெய் தேய்த்துத் தலை முழுகுவோர் வெயில் வெளிச்சத்தில் நின்றபடியாய் அதனைத் தேய்த்து முழுகுதல் நலம் பயக்கும். ஏனெனில், வெயிலிலுள்ள நாலாம்வகை உய்வனவு எண்ணெயிற்றோய்ந்து உடம்பினும் சுவறும் வெயிலில் நின்று எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாதவர்கள், நல்லெண்ணெயை ஒருமணிநேரம் வரையில் வெயிலில் வைத்தெடுத்துத் தேய்த்துக் கொண்டால், வெயிலிலுள்ள உய்வனவு எண்ணெயிற் சுவறி, அதன்பின் அதன் வழியே உடம்பிற் சுவறும்.

இனி, ஆவின்பாலானது பெரியவர்கட்கேயன்றிச் சிறு குழந்தைகட்குஞ் சிறந்த உணவாகும். இதன்கண் தன்கண் உள்ள முதலுணா (Proteins) வானது மிக உயர்ந்த குணம் வாய்ந்தது. இத்துணைச் சிறந்த முதலுணாப் பொருந்தப் பெறாத பருப்பு வகைகளை உணவாகக் கொள்பவர்க்குப் பாலுணவுங் கட்டாயமாகச் சேர்க்க வேண்டுவதொன்றா மென்பதை அவர்கள் நினைவுகூர்தல் வேண்டும். அதுவேயுமன்றிப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/54&oldid=1597292" இலிருந்து மீள்விக்கப்பட்டது