பக்கம்:மறைமலையம் 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
29

றன்மைகளை அறிந்து அவற்றிற்கு இணங்க உணவு கொள்ளல் வேண்டும். காவிரியாற்று நீரிற் பொன் கலந்திருத்தலால் அஃது ஓடுஞ் சோழநாட்டில் உறைபவர்கள் சூடுங் குளிர்ச்சியும் ஒத்த நிலையிலுள்ள பண்டங்களை உணவாகக் வேண்டும்,தண்பொருநை (தாமிர பரணி) பாயும் பாண்டி நாட்டில் உறைபவர்கள் அந்நீரிற் செம்பு கலந்திருத்தலை அறிந்து, குளிர்ச்சி பொருந்திய உணவை உட்கொள்ளல் வேண்டும்; பனி மிகுந்த இமயமலை யிலிருந்து தோன்றி வடநாட்டில் ஓடுங் கங்கையாறு பாயும் இடங்களில் இருப்பவர்கள் அந்நீர் குளிர்ச்சி மிக்கதாயிருத்தலின் அதற்கு மாறான சூடுள்ள கோதுமையினை உணவாக கொள்கின்றனர்.இப்படியே அவ்வவ்விடங்களின் இயல் பறிந்து அவ்வவற்றிற்கேற்றவாறு உணவை ஒழுங்கு செய்து கொள்ளல் இன்றியமை யாததாகும் என்க.

இனி,ஒருவருடம்பின்றன்மை மற்றொருவர் உடம்பின் றன்மையைப் போல் இராது. அதைப்பான பருத்த உடம்புள்ளவர்களுக்குக் காற்றின்கூறு மிகுதிப் பட்டிருக்குமாதலால் அவர்கள் காற்றின் கூறுள்ள வாழைக்காய் வள்ளிக்கிழங்கு முதலியவற்றை மிகுதியாய் உண்ணலாகாது; ஓரோவொரு கால் அவற்றை உண்ண வேண்டினும் நன்றாய் நீர் சுவற வறுத்துப் பிறகு சிறிதாய் அவற்றைத் தின்னல் வேண்டும். மெலிந்து ஒல்லியா யிருப்பவர்கள் சூடான யாக்கை உடையவர்களாகை யால், அவர்கள் பாகற்காய் கத்திரிக்காய் போன்ற சூடுமிகுந்த பண்டங்களை நிறையத் தின்னலாகாது; சிலகாற்றின்ன வேண்டினும் அவற்றை வறட்டாமல் நீர்ப்பதமாகச்,சமைத்துத் தின்னல் வேண்டும்.இன்னும் ஒவ்வொருவருடம்பில் ஒவ்வொரு வகையான நோய் உண்டு. அதனைச் செவ்வையாய்த் தெரிந்து அந்நோய் நீக்குதற்கான பண்டங்களை மிசைதல் வேண்டுமேயல்லால், அந் நோயை மேன்மேற் பெருகுவிக்கும் பொருள்களைத் தீனியாக எடுத்தலாகாது. நோயாளிகளுக்கு நோயை மிகுதிப்படுத்தும் பண்டங்களிலே விருப்பம் உண்டாதல் இயல்பு; ஆயினுந் தமது அறிவின் வன்மையால் அவ் விருப்பத்தை வேரறக் கல்லி அந் நோய்க்கு மாறான பொருள்களையே விரும்பி யுட்கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/62&oldid=1597296" இலிருந்து மீள்விக்கப்பட்டது