பக்கம்:மறைமலையம் 1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
45

இயங்கும் உயிர்கள் ஒருகாற்புற் பூண்டுகளின் உதவியை வேண்டாமலே உயிரோடிருக்கலாம். ஆனால், அவ்வுயிர்வளியொடு கூட நச்சுக் காற்றும் ஊடே ஊடே ஓயாமல் வந்து நிரம்புகின்றது. யாங்ஙனமெனிற் காட்டுவாம்; இயங்கும் உயிர்களின் உடம்பிலுள்ள தசை அவ்வளவுங் கரியேயாகும்; இதனை அறியவேண்டின் ஒரு சிறிய ஊன் துண்டத்தை நெருப்பில் இடுக, அதிலுள்ள பசை வறண்டவுடன் அது கரியாவதைக் காணலாம். இங்ஙனங் கரியால் ஆன ஊன், உயிர் உள்ள உடம்புகளில் ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாக ஆக்கப்பட்டு வருதலின் அவ் ஊனின் பழைய பகுதிகளும் அவ் ஒவ்வொரு நொடியுங் கழிக்கப்பட்டுக் கொண்டே வரும். அவ்வாறு கழிக்கப்பட்ட ஊன்பகுதிகளான கரி உள்ளிழுக்கப்படும் உயிர்வளியொடு கலந்து நச்சுக் காற்றாகப் புறத்தே மூச்சின்வழியாய் வெளிப்படுத்தப்படுகின்றது. இங்ஙனமே ஒவ்வோர் இயங்கும் உயிரின் உடம்பினின்றும் ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தப்படும் நச்சுக்காற்று[1] இடைவெளி எங்கும் வந்து நிரம்புதலால், மீண்டும் அதனையே உள்ளிழுக்க நேருமாயின் இயங்கும் உயிர்கள் அத்துணையும் இரத்தம் நஞ்சாகி இறந்து போம். ஆனால், அவை அங்ஙனம் இறவாமைப் பொருட்டுப் பேர்இரக்கம் உடையனாகிய இறைவன் மரஞ்செடி கொடிகளை அமைத்து வைத்திருக்கின்றான். எவ்வாறெனின், மக்களாகிய நாமும் ஏனை இயங்கும் உயிர்களும் வெளிவிடும் நச்சுக்காற்றை இம் மரஞ் செடி கொடிகள் உள் இழுத்துப் பிறகு தூய உயிர்வளியை வெளிவிடுகின்றன. நமது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவது உயிர்வளி, பயிர் பச்சைகளின் உயிர் வாழ்க்கைக்கு முதன்மையாய் வேண்டப்படுவது நச்சுக் காற்றாகிய கரிவளி. நாம் வெளிவிடுவது கரிவளி, பயிர் பச்சைகள் வெளிவிடுவது உயிர்வளி, நாம் வெளிவிடுங் கரிவளி பயிர்பச்சைகளின் உயிர்வாழ்க்கைக்கு உரியதாய்ப் பயன்படவும், பயிர் பச்சைகள் வெளிவிடும் உயிர்வளி நமதுயிர் வாழ்க்கைக்கு ஏற்றதாய்ப் பயன்படவும் வகுத்த இறைவனது பேரருட் செயலை ஆராய்ந்து பார்க்குங் கால் இயங்கும் உயிர்கட்கு உதவியாவன புற்பூண்டுகளும், ஒருநிலையிலுள்ள

  1. 4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/78&oldid=1597302" இலிருந்து மீள்விக்கப்பட்டது