பக்கம்:மறைமலையம் 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46

❖ மறைமலையம் 1 ❖

புற்பூண்டுகட்கு உதவியாவன இயங்கும் உயிர்களுமேயாம் என்பது புலப்படவில்லையா? பயிர் பச்சைகளிலிருந்து அவற்றின் பயனை நாம் எடுத்து உட் கொண்டு உயிர் வாழ்தல்போல, நாம் வெளியே கழித்து விடுங் கரிவளியை உட்கொண்டு பயிர் பச்சைகள் உயிர் வாழ்கின்றன. இவ்வாறாக இயங்கும் உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கு நிலையியற் பொருள்களும் நிலையியற் பொருள்களின் வாழ்க்கைக்கு இயங்கியற் பொருள்களும் இன்றியமையாதன வாய் இருத்தலால், மக்களும் பிற இயங்கும் உயிர்களும் புற்பூண்டுகளையும் அவற்றின் பயன்களையும் உண்டு உயிர் வாழ்தலே பொருத்தம் உடைத்தாம். இதுவே இவற்றை இங்ஙனம் வகுத்து அமைத்த இறைவன் திருவுளத்திற்கும் ஒப்பதாகும்.

இவ்வாறன்றி இயங்கும் உயிரில் ஒன்று மற்றொன்றனைக் கொன்று தின்னுதல் இயற்கைக்கும் இறைவன் திருவுளச் செயலுக்கும் முற்றும் மாறாய் இருத்தலால், ஊன் தின்னும் உயிர்கள் அவ்வூன் உணவினாலேயே பலவகை நோய்களை அடைந்து பெரிதுந் துன்புற்று இறக்கின்றன. ஊன் உடம்புகள் இயற்கையிலேயே அருவருக்கத்தக்க அழுக்குகளும் நச்சு நீரும் உடையனவாகும். எவ்வளவு மணமுஞ் சுவையுந் தூய்மையும் உடைய திண்பண்டங்களே யாயினும், அவை நமது உடம்பின் உட்சென்ற அளவானே, அம் மணமுஞ் சுவையுந் தூய்மையுங் கெட்டுத் தீ நாற்றமும் அருவருப்பும் உடைய மலநீர்களாய்க் கழிக்கப்படுகின்றன. இந்த இயல்பை உற்றுநோக்குமிடத்து, ஊன் தின்னும் மக்கள் பூனை நாய் புலி கரடி சிங்கம் முதலிய உயிர்களின் உடம்புகளைவிட, ஊனே தின்னாத யாடு மாடு குதிரை மான் மரை யானை முதலிய உயிர்களின் உடம்புகள் மிகச் சிறந்தனவாகவுந் தூயனவாகவும் இருத்தலைக் காண்கின்றோம்; ஏனென்றால், யாடு மாடு குதிரை முதலிய வற்றின் சாணங்கள் தீ நாற்றமும் அருவருக்கத்தக்க இயல்பும் இல்லாதனவாயிருக்கின்றன. ஊன் தின்னும் உயிர்களின் உடம்புகளைக் காட்டினும் ஊன் தின்னாதவற்றின் உடம்புகள் தூயனவாயிருத்தலை ஆராய்ந்தால், அவை அங்ஙனம் அருவருக்கத்தக்க தன்மையை அடைந்தது அடைந்தது ஊன் தின்றதனாலேயே என்பது புலனாகும். அப்படியானால், ஊன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/79&oldid=1569158" இலிருந்து மீள்விக்கப்பட்டது