பக்கம்:மறைமலையம் 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மருத்துவம் - 1 ❖
vii



தமிழ்க்காவலர் - மறைமலையடிகள்

பண்டைத் தமிழ் நூல்களைக் கண்டவர் என்று சாமிநாத அய்யரையும், தமிழ் நாடகங் கண்டவரென்று சுந்தரம் பிள்ளையையும், சைவந் தழைக்க வந்த வான்முகில் என்று ஞானியாரடிகளையும், சமயங்களின் சமரசங் கண்டவரென்று திரு.வி. கலியாணசுந்தரரையும், பல்கலை கண்ட அறிஞர் எனக் கா.சுப்பிரமணிய பிள்ளையையும், கவிச்சுவை கண்டவரெனச் சிதம்பரநாதரையும், தமிழ்க் கலைகள் தழைக்க வந்த பேராசிரியர் என்று கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி)யையும், புலத்துறை முற்றிய நலத்தகு சான்றோரென வேங்கடசாமி நாட்டாரையும், தமிழ் ஒலியாராய்ச்சியின் நுட்பங் கண்டாரென்று மாணிக்க நாயக்கரையும், இலக்கிய நலங்கண்ட ஏந்தலென்று கதிரேசன் செட்டியாரையும், வாரவழிபாடுகண்ட வள்ளலார் என்று சச்சிதானந்தம் பிள்ளையையும், நாட்டுணர்வூட்டிய நல்லிசைப் பாவலரெனப் பாரதியாரையும் பாராட்டிய தமிழுலகம், இருபதாம் நூற்றாண்டின் இணையில்லாப் புலவரான அடிகளைத் தனித்தமிழ் கண்ட தமிழ்க் காவலர்” என உணர்ச்சியுடன் போற்றுகின்றது.


- பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகள் வரலாறு (பக் 302)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/8&oldid=1604726" இலிருந்து மீள்விக்கப்பட்டது